தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், ப்ளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது.


மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிதேர்வர்களுக்கு கொரோனா தொற்று காலம் முடிந்த பின் தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021-21 ஆம் கல்வியாண்டில் நடைபெற இருந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு தனது அறிக்கையை அளித்துள்ளது.


10,11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.


அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. 




* 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.


* செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.


* கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.


* 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.


* கடந்தாண்டு 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அம்மாணவர்களுக்கு தற்போது அந்த தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு 35 சதவீதம் வழங்கப்படும்.


* 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு அகமதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.


* ஒவ்வோரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு, உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.


* இந்த மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.


* தனித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.