மயிலாடுதுறை அருகே கோயில் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 313 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
2024 - 25 -ஆம் கல்வி ஆண்டுக்கான 10 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 -ஆம் தேதி வரை நடைபெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 -ம் தேதி தொடங்கி 28 -ஆம் தேதி நிறைவு பெற்றது. தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 21 -ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்றது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் 11 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது.
வெளியான முடிவுகள்
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியதில், 93.80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 4,17, 183 பேரும், மாணவர்கள் 4,00,078 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விவரங்கள்:
தேர்ச்சி பெற்றவர்கள் : 8,17,261 (93.80%)
மாணவியர் 4,17,183 (95.88%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,94,264. தேர்ச்சி பெற்றோர் 8,18,743 தேர்ச்சி சதவிகிதம் 91.55%.
கடந்த மார்ச் / ஏப்ரல் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 2.05% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.
கடந்த ஆண்டு 91.55% பேர் தேர்ச்சி
முன்னதாக மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24 -ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 -ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 91.55% பேர் தேர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்ட விபரம்
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 6037 மாணவர்கள், மாணவிகள் 6112 என 12,149 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 5530 மாணவர்களும், 5878 மாணவிகள் என மொத்தம் 11,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.60 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.17 ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.90% ஆகும். இது கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீதம் பெற்ற நிலையில் இந்தாண்டு 93.90 சதவீதம் எடுத்து 2.35 சதவீதம் அதிகம். மாநில அளவில் 23 வது இடம் பெற்றுள்ளது. 496 மதிப்பெண்கள் எடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் தவசி மலை 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி உமாபார்வதி என்ற மாணவி 495 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், மேலும் மாவட்ட அளவில் 494 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை 5 பேர் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவர் தேர்ச்சி
இந்நிலையில் மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25 -ஆம் தேதி உத்திராபதியார் கோவில் திருவிழாவில் நடைபெற்றது. இந்த திருவிழாவில் அப்பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரது மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தமிழ் துரை இரும்பு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த போக்கஸ் லைடில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சூழலில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்துறை 313 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இதனால் மேலும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தமிழ்துறை நினைவால் வேதனையடைந்துள்ளனர்.