10ஆம் வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தை இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். நடப்பாண்டில் 10ஆம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர் ஆவர். மாணவிகள் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 1 நபர் ஆவார்.


10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் அடைந்துள்ளனர். அதாவது 85.83 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 714 ஆகும். இவற்றில் மேல்நிலைப்பள்ளிகள் 7 ஆயிரத்து 456 ஆகும். உயர்நிலைப்பள்ளிகள் 5 ஆயிரத்து 258 ஆகும். இவற்றில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 6 ஆகும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 886 ஆகும்.


தமிழில் 94.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 96.18 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 90.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 93.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 91.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாவணர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 16 ஆகும். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 5 ஆயிரத்து 424 ஆகும். அதாவது 90.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 242 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்களில் 133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 519 நபர்கள் ஆவர்.


இந்நிலையில் 2022ஆம் கல்வி ஆண்டில் 42,519 மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதவில்லை. அதாவது மொத்தத்தில் 4.45% மாணவர்கள் தேர்வுக்கு வருகை தரவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 




இதற்கிடையே 2020 மற்றும் 2021ஆம் கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக, 10ஆம் வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை, 20,053 ஆக இருந்தது. இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 2.09 சதவீதம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.   


கொரோனா காரணமா?


இந்நிலையில் 2022ஆம் கல்வி ஆண்டில் 42,519 மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதவில்லை. 2019-ல் வராத 20,053 மாணவர்களைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதும்  ஆன்லைன் கல்வி முறையும் காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோல, கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 


இதில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.