திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு நேற்று இன்று, நாளை என்னும் தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு 24.04.2023 வரை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தப்பட்டது. 


மேலும் இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர்  உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.




தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, இன்று 'மாபெரும் தமிழ்க் கனவு* பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு நடைபெற்றது. நமது தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூகச் சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் 'மாபெரும் தமிழ்க் கனவு'பரப்புரைத் திட்டம் செயல்படுத்தப்படும். நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் குறைந்தபட்சம் 15 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே இத்திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை நடத்தி முடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.




மேலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்ப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலும், அதேநேரம் தாங்கள் புலமை பெற்ற துறை சார்ந்தும் பேருரை நிகழ்த்துவார்கள். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள், பல்துறை நிபுணர்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர்களுக்குத் தமிழ் மரபின் பெருமிதத்தை உணர்த்துவதாகவும் அமைந்து வருகிறது என தெரிவித்தார்.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் புத்தகக்காட்சி, 'நான் முதல்வன்', வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு 'உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி', 'தமிழ்ப் பெருமிதம்' ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக நிகழ்வில் ஏறத்தாழ 800 மாணவ. மாணவிகள் பங்கேற்றனர். 'தமிழ்ப் பெருமிதம்' சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாரட்டி பெருமிதச் செல்வி , பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும், பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்பட்டது.