பள்ளி காலத்தில் பலருக்கும் பல நினைவுகள் இருந்தாலும் பிட் அடித்த திகில் அனுபவம் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமாட்டாங்க. நாளைதான் தேர்வு என்று நினைவில் இருக்கும், இருந்தும் இந்த தேர்வு நம்மை என்ன செய்துவிடும் என்ற ஒரு குருட்டு தைரியத்தில் இரவு வரை நண்பர்களுடன் உலாவி வந்து ஊர் அடைந்ததும் வந்து வீட்டில் அடைவோம். 


விடிந்ததும் குபீர் என்று நெஞ்சில் ஒரு பயம் வரும். அட கொடுமையே இன்னைக்கு நமக்கு பரீட்சையாச்சே. ஒன்னும் படிக்கல. பெயில் ஆனோம் நம்மள வீட்லையும், ஸ்கூலையும் கொன்னுருவாங்க. இப்படி ஒரு புறம் மனம் பயம் கொள்ள, அப்பொழுதுதான் ஒரு சாத்தான் நம்மை வெல்லும். 


படிச்சு பாஸ் ஆகுறது ரொம்ப கஷ்டம். கிழிச்சு பாஸ் ஆகுறது நமக்கு இஷ்டம் என்று நம்முடைய புத்தகத்தில் பிட்டை கிழித்தால் மாட்டிகொள்வோம் என்று நம்முடைய நண்பர்கள் புத்தகத்தில் கிழித்து அவர்களே அதை தேர்வறையில் பகிர்வோம். அப்படி பிட் அடித்து ஆசிரியர்களிடம் மாட்டியும், மாட்டாமலும் பாஸ், பெயில் ஆன ஒரு சிலரின் சுவாரஸ்யமான கதைகளை இங்கே பாப்போம். 


கேள்வி - ஸ்கூல் டைம்ல பிட் அடிச்சு இருக்கீங்களா..? 


முத்து : 


ஹாஹஹா... அது தான் ப்ரோ நான் மேக்ஸ் எக்ஸாம் பாஸ் ஆனதுக்கு முக்கிய காரணம். எனக்கு சின்ன வயசுல இருந்து மேக்ஸ்னா பிடிக்கவே பிடிக்காது. வரவும் வராது. மத்த எக்ஸாம்லாம் சூப்பரா பாஸ் ஆகிருவேன். மேக்ஸுன்னு நான் டோடல் ஆப். அப்பதான் எனக்கு 9 த்து ஆன்வல் எக்ஸாம். தமிழ், இங்கிலீஷ் எக்ஸாம்லாம் நல்லா பண்ணிட்டேன். மேக்ஸ் எக்ஸாம் முன்னாடி நாள் உட்கார்ந்து முட்டு முட்டுன்னு முட்டிட்டேன். ஒண்ணுமே வரல. சரி இது வேலைக்கு ஆகாதுன்னு. பிட் அடிக்கலாம்ன்னு முடிவு பண்ணி நோட்ல இருந்து பேப்பர் கிழிச்சு சின்ன சின்னதா 5 மார்க் ஒரு 5 எழுதுனேன். அத கொண்டும் எக்ஸாக்கு கொண்டும் போய்டேன். வாழ்நாள்ள அதான் முதல் தடவை. பிட் எடுக்கவே கை நடுங்குது. மாட்டுனா சங்கு, மாட்டாமா பிட் அடிச்சா நம்மதான் கிங். 


இதுக்கு மேல பொறுமை இல்லை. பாஸ் ஆகனும். அப்ப இதுதான் ஒரே வழின்னு காலுக்கும் செருப்புக்கு நடுவுல சொருகி வச்ச, பிட் எடுத்தேன். எழுதி வச்ச அஞ்சு 5 மார்க்ல மூணு வந்துருந்துச்சு. எடுத்தேன் எழுத ஆரம்பிச்சேன். கை பயங்கர நடுக்கம். வேர்த்து ஊத்துத்து. எனக்கு நார்மலா வேர்க்கவே வேர்க்காது அன்னைக்கு அல்டிமேட். ஒன்னு எழுதி முடிச்சுட்டேன். 2 வது பிட் அடிக்கணும். இப்ப இடுப்புல இருந்து பிட் எடுக்கணும். பக்கத்துல மிஸ் நிக்குறாங்க, அந்த மிஸ்க்கு வேற என்னைய ரொம்ப பிடிக்கும். மாட்டுனா சேர்த்து வச்ச மொத்த பேரும் டேமேஜ் ஆகிரும். எழுதலாமா வேணாமான்னு ஒரே யோசனை. முடிவு பண்ணேன். பெயில்னா போறோம். இதுக்கு மேல பிட் வேணாம்டா சாமின்னு. தெரிஞ்ச கேள்வி எழுதுனேன். எல்லாத்தையும் அட்டென்ட் பண்ணேன். ரிசல்ட் வந்துச்சு பாஸ்ஸும் ஆனேன். இப்ப வரைக்கும் நான் எப்படி பாஸ் ஆனேன் தெரியல. ஆனா அன்னைக்கு முடிவு பண்ணேன். பிட் அடிக்கவே கூடாதுன்னு அதுக்கு அப்புறம் தொடவே இல்லையே. 




வசந்தகுமார் : 


ப்ரோ அந்த கதைய ஏன் கேட்குறீங்க. அது ஒரு திகில் சம்பவம். எப்பவும் எதாச்சும் ஒரு எக்ஸாம்க்கு பிட் எடுத்து அடிச்சுருவேன். நான் நல்லா படிக்குற பையன்தான். ஆனா, கொஞ்சம் படிக்க திமிரு. அன்னைக்கு இங்கிலீஷ் எக்ஸாம் எஸ்ஐ எழுதணும். கொண்டு போனேன் எனக்கு ஜன்னல் பக்கம் சீட்டு. யாரும் பக்காலேன்னு நான் பேசாம உட்கார்ந்து பிட் எழுதிட்டு இருந்தேன். பின்னாடி யாரு இருக்காங்கன்னு பார்க்கல. ஜன்னல் பக்கம் ஏதோ நிழல் ஆடுச்சு என்னனு திரும்பி பார்த்தா எங்க ஸ்கூல் ஹெச்.எம் என்ன பார்த்துட்டே நின்னுட்டு இருக்காரு. அவ்வளவுதான் ஹார்ட் பீட் எகிறுச்சு. வெளிய கூப்டாரு. விட்டாரு கன்னத்துல பளார்ன்னு 5 விரலும் பதிஞ்சுருச்சு. சட்டைய பிடிச்சு நேரா அவருக்கு ரூம்க்கு கூட்டிட்டு போனாரு. முட்டி போட வச்சு மனுசன் வெளுத்துடாரு. 


திடீர்ன்னு என்ன நினச்சாருன்னு தெரியல. ஏதோ ஒரு நோட் எடுத்து என்னமோ எழுதுனாரு. வந்து கையெழுத்து போடுன்னு கத்துனாரு. போய் பார்த்தா டிசி, அவ்வளவுதான் கதறிட்டேன். விடவே இல்ல கையெழுத்தும் போட வச்சிட்டாரு. காலுல விழுந்துட்டேன். அதுக்கு அப்புறம் மனுசன் நாளைக்கு அப்பா, அம்மாவ கூட்டிட்டு வந்து என்ன பார்த்துட்டு எக்ஸாம் எழுத போ . அதுக்கு அப்புறம் எல்லாருமே நலம்தான். பசங்க எல்லாம் லாஸ்ட் நாள் டிசில கையெழுத்து போட்டு வாங்கிட்டு போகுறப்ப, நான் மட்டும் போடாமையே டிசி வாங்கிட்டு போனேன். 


ராஜா : 


நான் 1st ல 8 th வரையும் நல்லாதான் படிச்சுட்டு இருந்தேன். 9th போய் சேராத கூட்டத்துக்கு கூட சேர்ந்தேன். மொத்தமும் கிளோஸ். படிப்ப விட ஊரு சுத்த ரொம்ப பிடிச்சு போச்சு. வர வர மாமியா கதைதான் என் கதை. முதல் இடைத்தேர்வு ஓரளவு நல்லதான் போய்ட்டு இருந்துச்சு. அடுத்து வந்துச்சு பாருங்க காலாண்டு. அட கொடுமையே என்ன நடத்துனாங்கன்னு கூட எனக்கு தெரியாது. நாங்கதான் ஸ்கூல் போகவே இல்லையே. ஸ்கூல் கட் அடிச்சுட்டு மாங்காய் திருட, கிரிக்கெட் விளையாட, ஆத்துக்கு குளிக்க இப்படி போய்ட்டு இருந்தேன். திடீர்ன்னு எக்ஸாம்னா என்ன பண்ண. சரி வர்றது வரட்டும்ன்னு எக்ஸாம் எழுத போனேன். 


என் கூட சேர்ந்து இருந்த பசங்க எல்லாம் பிட் எடுத்துட்டு வந்தாங்க. நான் மட்டும் என் பக்கத்துல உட்கார்ந்து இருந்த சின்ன வயசுல இருந்து என்கூட படிச்சு வந்த மதுபாலா பொண்ணுகிட்ட பேப்பர் வாங்கிட்டேன். அந்த பொண்ணு கையெழுத்து சூப்பரா இருக்கும். என் கையெழுத்து சுமார்தான். பின்னாடி பிட் அடிச்சு என் பசங்க மாட்டிகிட்டாங்க. போச்சுடான்னு பயத்துல உட்கார்ந்து இருந்தேன். வேகமா கார்த்திக்ன்னு ஒரு சார் வந்தாரு. அப்படியே என் பேப்பர் புடுங்க, நானும் அந்த பொண்ணும் பயத்துல நடுங்க.. என்ன உட்கார வச்சுட்டு அந்த பொண்ண கூட்டிட்டு போய்ட்டாரு. நான் ஓடிப்போய் சார் அந்த பொண்ணு எதுவும் பண்ணல, நான் தான் பேப்பர் புடுங்கிட்டேன்ன்னு அவர்கிட்ட சொன்னேன். அப்புறம் என்ன ரெண்டு பேருக்கும் அடி. அந்த பொண்ணு கூட விட்டுட்டாங்க. என்ன போற, வர்ற சார்லாம் பொளந்தாங்க. அப்ப யோசிச்சேன். பிட்டு இனிமே கட்ன்னு. 


தேர்வுகள் தோல்வியில் முடிந்தால், சரிசெய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் இந்த முறைகேடுகள் வாழ்க்கையையே முடித்துவிடும் ஜாக்கிரதை, மாணவர்களே..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண