ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான மாநில‌ கல்விக்‌ கொள்கைக் குழு, வரைவு அறிக்கையைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலினிடம் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து, மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


மே மாதம் வரை அவகாசம்


அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் குழு அமைக்கப்பட்டது. குழுவின்‌ தலைவராக புதுடெல்லி உயர் நீதிமன்ற முன்னாள்‌ தலைமை நீதிபதி முருகேசன்‌  நியமிக்கப்பட்டார். இக்குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள்‌ தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது, மாநில கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


யாரெல்லாம் பங்களித்தனர்?


மாநிலக்‌ கல்விக்‌ கொள்கையை உருவாக்க‌ பொதுமக்கள்‌, கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்‌, மாணவர்கள், பெற்றோர்கள்‌ மற்றும் தனியார்‌ கல்வி நிறுவனத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை பெறப்பட்டன. மேலும்‌ சில மாவட்டங்களில்‌ கருத்துக் கேட்புக்‌ கூட்டங்கள்‌ நடத்தப்பட்டன.


இதைத் தொடர்ந்து கல்விக் கொள்கை இறுதிசெய்யப்பட்டு, மே மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கல்விக் கொள்கை குழுவின் கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குழு தனது அறிக்கையை 2023 செப்டம்பர் மாத இறுதிக்குள் அளிக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.  


பேராசிரியர் ஜவஹர் நேசன்‌  விலகல்


இதற்கிடையே மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் இருந்து மாநில உயர் நிலைக்‌ கல்விக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ஜவஹர் நேசன்‌ விலகினார். தொடர்ந்து காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் ஃப்ரீடா ஞானராணி, சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் ஜி.பழனி  ஆகியோர் புதிய  உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.


செப்டம்பரில் சமர்ப்பிப்பு


இந்த நிலையில், மாநிலக் கல்விக் கொள்கைக்கான பணிகள் பெருமளவு நிறைவு பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, முடிவுகள் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணிகளால் சமர்ப்பிப்பு தாமதமாகியது. 


இந்த நிலையில் மாநிலக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலினிடம் குழு நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.