தமிழ்நாட்டில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி அரசுப் பள்ளி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வந்த நிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.


சம வேலைக்கு சம ஊதியம்


தொடக்கக் கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ இடைநிலை ஆசிரியர்களில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 2009ஆம் ஆண்டு மே 31 வரை வேலையில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 ஆகவும் அதற்குப் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.5200 ஆகவும் உள்ளது. அதாவது ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைக்கப்பட்டது. இதனால் சுமார் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


அதேபோல 90 சதவீத ஆசிரியர்களின்‌, குறிப்பாக பெண் ஆசிரியா்களின்‌ பதவி உயர்வு வாய்ப்பை‌ பறிக்கும்‌ வகையிலும்‌, தொடக்கக் கல்வித்துறையில்‌ 60 ஆண்டுகாலமாக நடைமுறையில்‌ இருந்த ஒன்றிய முன்னுரிமையை மாற்றி மாநில முன்னுரிமையைக்‌ கொண்டு வந்து ஒரு லட்சத்திற்கும்‌ மேற்பட்ட ஆசிரியர்களின்‌ பணி முன்னுரிமை மற்றும்‌ பதவி உயர்வு ஆகியவற்றைப் பாதிக்கும்‌ வகையிலும்‌ வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்‌ 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


முன்னதாக பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலின்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.


19 நாட்கள் போராட்டம்


தினந்தோறும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் ஆசிரியர்களைக் கைது செய்து வந்தனர். கைது செய்யப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை சமுதாய நலக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்ட ஆசிரியர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



19 நாட்களாக இந்த போராட்டம் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், டிபிஐ வளாகத்தில் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 5 நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, 19 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


இதுகுறித்து பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகி ராபர்ட் கூறும்போது, ’’தொடக்கப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.