சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகா விஷ்ணு என்னும் பேச்சாளர் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிற்போக்குத் தனமான கருத்துகளை அவர், மாணவிகளிடம் அவர் பகிர்ந்து கொண்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனர். தொடந்து விஷ்ணு கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். 


இந்த நிலையில் நிறைய அரசுப் பள்ளிகளில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை கருத்துகள் விதைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து எழுத்தாளர் நலங்கிள்ளி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு:

’’மகா விஷ்ணு, ஆம், கலியுக மகா விஷ்ணு பற்றித்தான் இன்று ஒரே விவாதம். அவர் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் மறுபிறவி பற்றி நடத்திய "ஆன்மிக" உரைக்குக் கடும் எதிர்ப்பு. தமிழக அரசும் பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழரசியைப் பணியிட மாற்றம் செய்துள்ளது. உடனே திராவிட ஆதரவாளர்கள் முதல்வரை வானளாவப் புகழத் தொடங்கி விட்டனர். பிழையில்லை.

ஆனால் இந்த மகா விஷ்ணுவுக்குத் துளியும் சளைத்தவர்கள் அல்ல சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள். இவர்கள் அடிக்கும் காவிக் கூத்துகளை திராவிட ஆதரவாளர்கள் அறியார். பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தால்தானே அவர்களுக்கு இந்தக் கூத்தெல்லாம் தெரியும். எல்லாம் சிபிஎஸ்இ மோகிகள் ஆயிற்றே.


’கணவனிடம் எப்படி நடக்க வேண்டும்?’

என் மூத்த மகள் ஈரோடை 12ஆம் வகுப்பு வரை அசோக் நகர் பள்ளியில்தான் படித்தாள். ஈரோடை வகுப்பறையில் கொஞ்சம் விளையாட்டாய் நடந்து கொண்டால் கூட, "நீ எல்லாம் உன் மாமியார் வீட்டுக்குப் போய் எப்படி குப்பை கொட்டப் போறீயோ?" எனக் கேட்பார்களாம் ஆசிரியர்கள். கணவனிடம் எப்படி அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ள வேண்டுமெனச் சிறப்புப் பயிற்சிகள் வேறு.


மகரிஷி மடமா? கல்விக் கூடமா?

அன்றாடம் மொட்டை வெயிலில் இறைவணக்கம் ஒரு மணி நேரம். தியானம் நடக்கும். புருவங்களுக்கு இடையே உடல் ஆற்றலை எல்லாம் திரட்டி வைத்து ஒரு தெய்வீக ஆற்றலை மாணவியர் உருவாக்கிக் கொண்டு குண்டலினி யோகம் செய்ய வேண்டுமாம்! இதை கிறித்துவ, இசுலாமிய, நாத்திக மாணவியரும் செய்ய வேண்டும்! இதென்ன ரமண மகரிஷி மடமா? கல்விக் கூடமா? இந்த ரமணாஸ்ரமத்தில் ஒரு மகா விஷ்ணு உள்ளே புகுந்து விட்டான் எனப் பதறுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?

இளைய மகள் பறை இங்கு 6ஆம் வகுப்பு படிக்கையில் அவளுக்குப் போதுமான கல்வி கிடைக்கவில்லை. 12 செக்ஷனில் ஒன்றே ஒன்றில் மட்டுந்தான் தமிழ்வழிக் கல்வி. மற்றதெல்லாம் ஆங்கிலவழி வகுப்பறைகள். எனவே என் மகளின் வகுப்பறைக்கு ஆசிரியர்கள் பங்களிப்பு குறைவு. மேலும், பள்ளி கழிப்பறை மலமும் சிறுநீரும் வழிந்தோடுவதால், பறை சிரமப்பட்டாள். தலைமை ஆசிரியர் தமிழரசியிடம் கூறினால், ’’நாங்கள் என்ன செய்வது, அரசு துப்புரவுப் பணியாட்களுக்கு ஊதியம் தருவதில்லை, எனவே நீங்களே வேண்டுமானால் பணம் செலவழித்து ஆட்களை நியமித்துக் கொள்ளுங்கள்’’ என அலட்சியமாகப் பதில் கூறினார்.


’ஆண்களிடம் பேசினாலே கர்ப்பம்’

எனவே பறையின் பள்ளியை மாற்றலாம் என முடிவெடுத்தோம். மாற்றுவது மாற்றுகிறோம், ஓர் இருபாலர் பள்ளியில் மாற்றலாம் என முடிவெடுத்தேன். ஆனால் பறை பசங்களுடன் சேர்ந்து படிக்க மாட்டேன் என அடம்பிடித்தாள். துருவித் துருவி விவாரித்ததில் எனக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. "புள்ளைங்களா, நீங்க ஆம்பளப் பசங்க கிட்டப் பேசினாலே கர்ப்பம் ஆயிடுவீங்க" அப்டின்னு ஆங்கில ஆசிரியர் பயமுறுத்தினாராம். அதாவது மாணவியரைக் காதல் வலையில் சிக்காமல் சாதியம் காப்பாற்றும் திருப்பணியை நிறைவேற்றுகிறார்களாம். கிராமங்களில் சாதி ஆணவம் அரிவாள் வெட்டாய் விழுகிறது என்றால், இங்கு சென்னையில் ஆசிரியரின் நாவே காதலுக்கு எதிராய் அரிவாளாய் நீள்கிறது.

வகுப்பறைகளில் நடக்கும் மத மூடநம்பிக்கை போதனைகளுக்கும் அளவே இல்லை. எனவே ஒரே ஒரு மகா விஷ்ணுவுக்கு எதிராகப் போராடுவதுடன் நின்று விடக் கூடாது. சென்னை மையத்தில் பெரும் ஊடக வெளிச்சத்தில் இயங்கி வரும் ஒரு பள்ளியே காவிச் சேற்றில் மூழ்கிக் கிடக்கிறது என்றால், கிராமப் புறப் பள்ளிகள் பற்றி சொல்லவும் வேண்டுமா?


தனி புராணமே எழுதலாம்


சங்கர மடப் பார்ப்பனக் கூட்டம் நேரடியாக நடத்தும் பள்ளிக் கூடங்களின் நிலைமை பற்றி பேசினால், தனி புராணமே எழுத வேண்டும். தமிழ்நாட்டுப் பள்ளிகள்தோறும் நிறைந்திருக்கும் காவிப் பார்த்தீனியங்களை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் ஸ்டாலின், களை வெட்டுவார் என்றே நம்புகிறேன்’’.


இவ்வாறு நலங்கிள்ளி தெரிவித்துள்ளார்.