தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 5,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்:


ஒரே பணி, ஒரே கல்வி தகுதி, ஒரே பதவி என அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்த நிலையிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இரு வேறு ஊதியங்கள் வழங்கப்பட்டு வருவதால் ஒருநாள் இடைவெளியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய வித்தியாசம் 20,000 ரூபாய் என்ற அளவில் இருந்து வந்தது. இந்த ஊதிய வித்தியாசத்தை சரி செய்யக்கோரி கடந்த 14 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர். 


கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி வரிசை எண்: 311 இல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ”சம வேலைக்கு சம ஊதியம்” என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் போது தமிழ்நாடு அரசானது இந்த ஊதிய வித்தியாசத்தை சரி செய்ய 3 நபர் குழு ஒன்றை அமைத்தது. அதன் மூலம் மூன்று மாதத்திற்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் குழு அமைக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்தும் இன்னும் தீர்வு காணப்படவில்லை.


தற்போது இந்த சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற கோரி கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, தினமும் 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும் நேற்று (பிப்ரவரி 26) முதல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 


அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்:


இந்த நிலையில், ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.


 தமிழ்நாடு முதலமைச்சர் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.


தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50,000 ஆசிரியர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில் நமது கழக அரசு கால முறை ஊதியத்தினை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், நமது கழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும் அரசாக இருந்து வருகிறது.


தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


கைவிட வேண்டும்:


கல்வியாண்டின் இறுதிநிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வு பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.