பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய  திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  


பள்ளிக் கல்வித்துறை சார்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. அதேபோல ஆசிரியர்களும் கற்பித்தல், நிர்வாகம், எழுத்து, ஒருங்கிணைத்தல் பணிகள் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை பல்லாண்டு காலமாக முன் வைக்கின்றனர். இந்த நிலையில் இவை அனைத்துக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


இதன்படி இணையம் வாயிலாக கோரிக்கைகளை அனுப்பும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. அண்மையில் பள்ளிக் கல்வித்துறைக்கு முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட குமரகுருபரன் ஐஏஎஸ், இந்தத் திட்டத்தைக் கொண்டு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.


எப்படி செயல்படும்?


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகளைப் பதிவு செய்யலாம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை ஏற்கப்படுகிறதா நிராகரிக்கப்படுகிறதா என்றும் இணையம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


ஆசிரியர்களின் தொடர் கோரிக்கைகள்


2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறி இருந்தது.


அதேபோல டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு தனியாகத் தகுதித் தேர்வு நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தது. எனினும் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றன.


கோட்டை முற்றுகை


இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் (டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் கடைசியில் இருந்து 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. அமைச்சரின் சில அறிவிப்புகளுக்குப் பிறகு போராட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. 


எனினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ, நவம்பர் 1ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் டிசம்பர் 28ஆம் தேதி கோட்டை முற்றுகையிடப்படும்  எனவும் அறிவித்துள்ளது. 


இந்த நிலையில் ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்வதன் மூலம் ஆசிரியர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.