அரசுப் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயிலும் வட மாநில மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவித் தொகை , பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
வடமாநிலத்தவர் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைப் பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
வட மாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியைப் படிக்க வைப்பதாகவும், மாணவர்கள் விரும்பிப் படித்து நன்கு புலமை பெற்று அள்ளதாகவும் , வட மாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும்
தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவித் தொகை , பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.