ஆர்ஆர்பி எனப்படும் இந்திய ரயில்வே வாரியம் சார்பில் நடத்தப்பட்ட என்டிபிசி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தேர்வு குறித்த அறிவிக்கை வெளியாகி 18 மாதங்கள் முடிந்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பான ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

Continues below advertisement

2024 செப்டம்பரில் தேர்வு அறிவிப்பு

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி ஆர்ஆர்பி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. (RRB NTPC CEN 05/2024.) இதில் 8,113 தொழில்நுட்பம் சாராத காலி இடங்களை நிரப்ப என்டிபிசி தேர்வு நடத்தப்பட்டது.

 குறிப்பாக நாடு முழுவதும் காலியாக உள்ள பயணச் சீட்டு மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர், தட்டச்சர், முதுநிலை எழுத்தர் உள்ளிட்ட இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடந்தது.

Continues below advertisement

தேர்வு முறை எப்படி?

இரண்டு கட்ட கணினி வழி எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட முறையில் இதில் தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் முதல்கட்டத் தேர்வு முடிவுகள் 2025ஆம் ஆண்டு வெளியான நிலையில் இறுதித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், 18 மாதங்கள் கடந்த பிறகும் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன் என்று தேர்வை எழுதிய லட்சக்கணக்கான தேர்வர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுதொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ட்ரெண்டாகும் பதிவுகள்

 இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில், #declare_ntpc2024_result#RRBNTPC என்பன உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை அவர்கள், இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.