காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே திருத்திய விடைத் தாள்களைக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வித்துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ அனைத்து அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ தனியார்‌ துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ காலாண்டுத்‌ தேர்வு நாளை (செப்.27) முடியும் நிலையில், செப்டம்பர் 28 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து 07.10.2024 (திங்கட்‌ கிழமை) அன்று திறக்கப்பட உள்ளன.  


சிறப்பு வகுப்புகளுக்கு அனுமதி இல்லை


இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளைத் திறக்கும் முன்பாக, வளாகங்களைத் தூய்மைப்படுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பன்றே விடைத்தாள்


அதேபோல பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே, மாணவர்களிடம் திருத்திய விடைத் தாள்களைக் கொடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீட்டிக்கப்பட்ட காலாண்டு விடுமுறை


முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு செப்.28 முதல் அக்.2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்.6ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறும் 7ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.


இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை நீட்டிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து விடுமுறை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.