புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம், 2026-27-ம் கல்வி ஆண்டிற்கான பல்வேறு யு.ஜி., மற்றும் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கையை கியூட் மதிப்பெண் அடிப்படையில் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக, ஸ்பாட் அட்மிஷன் வரும் 27 ம்தேதி நடக்கும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2026-27-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை (UG) மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும் 27-ஆம் தேதி நேரடிச் சேர்க்கை (Spot Admission) நடைபெற உள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் சேர்க்கையானது கியூட் (CUET) நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பல்கலைக்கழகப் பதிவாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

நேரடிச் சேர்க்கைக்கான முக்கிய வழிமுறைகள்:

நேரில் பதிவு செய்தல்: நேரடிச் சேர்க்கையில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வரும் 27-ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணிக்குள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள தொடர்புடைய பள்ளிகள், துறைகள் அல்லது மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் செல்லாது: மதியம் 12:00 மணிக்கு மேல் பெறப்படும் பதிவுகளும், ஆன்லைன் வழியிலான விண்ணப்பங்களும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

சான்றிதழ் சரிபார்ப்பு: மாணவர்கள் தங்களுடைய அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சமூகச் சான்றிதழ்களின் அசல்களை (Originals) நேரில் சரிபார்ப்பிற்காகக் கொண்டு வர வேண்டும்.

கட்டணம் செலுத்துதல்: சேர்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அதற்கான சேர்க்கைக் கட்டணத்தை உடனடியாக ஆன்லைன் வாயிலாகச் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும். காலிப் பணியிடங்கள் மற்றும் தகுதியின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.

முன்னுரிமை அளிக்கப்படும் முறை:

முதல் முன்னுரிமை: பல்கலைக்கழகம் ஏற்கனவே வெளியிட்ட ஒட்டுமொத்த பொதுத் தகுதிப் பட்டியலின் (Overall Merit List) அடிப்படையில், இதுவரை வெளியான எந்தவொரு தேர்வுப் பட்டியலிலும் இடம் பெறாத மாணவர்களுக்கு முதலிடம் அளிக்கப்படும்.

இரண்டாம் முன்னுரிமை: ஏற்கனவே வெளியான தேர்வுப் பட்டியல்களில் பெயர் இடம்பெற்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணம் செலுத்த முடியாமல் வாய்ப்பை இழந்த மாணவர்களுக்குத் தகுதியை நிரூபித்துச் சேர வாய்ப்பளிக்கப்படும்.

மூன்றாம் முன்னுரிமை: இதுவரை புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்காத, ஆனால் கியூட் தேர்வில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆஜராகி தகுதி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.