பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் காலமானார்.

Continues below advertisement

94 வயதான அவர் இதயநோய் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சௌகார் ஜானகி மறைவு திரைத்துறையினர் இடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சௌகார் ஜானகியின் சினிமா பயணம்

1950ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஷாவுக்காரு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சங்கரமஞ்சி ஜானகி. அந்த படத்தின் பெயர் இவரின் முன்னால் வந்து சௌகார் ஜானகியாக பிரபலமாக்கியது. 

Continues below advertisement

சௌகார் ஜானகி இந்திய திரையுலகில் 7 தலைமுறைகளாக நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400 படங்களில் நடித்துள்ளர். 1952ம் ஆண்டு தமிழில் வளையாபதி படம் மூலம் நடிகையாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என அன்றைய முன்னணி நடிகர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். 3 ஆயிரத்துக்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். 

கன்னட சினிமாவின் முதல் பான்-இந்திய படமாக அறியப்படும் மகிஷாசுர மர்த்தினி படத்தில் ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார். அஜித்துடன் தொடரும் என்ற படத்திலும், கிருஷ்ணாவுடன் வானவராயன், வல்லவராயன் படத்திலும், கார்த்தி நடித்த தம்பி படத்திலும்,  கடைசியாக தமிழில் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்திலும் நடித்திருந்தார். 

தன்னுடைய சினிமா கேரியரில் பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், தில்லு முல்லு, வெற்றி விழா, பாமா விஜயம், தில்லு முல்லு, ஹேராம், சிவா என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். 

என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர்,கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகிய நான்கு முதலமைச்சர்களுடனும் இணைந்து பணியாற்றிய இவருக்கு உண்டு. 2023ம் ஆண்டு தெலுங்கில் கடைசிப்படமாக அன்னி மஞ்சி சகுனமுலே படத்தில் சௌகார் ஜானகி நடித்திருந்தார். இவர் இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது 2022ம் ஆண்டு வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்ஜிஆர் விருது, சிறப்பு கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நந்தி விருதுகள், பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது என பலவற்றையும் பெற்றுள்ளார்.