புதுச்சேரி: புதுச்சேரியில் இந்த ஆண்டு செண்டாக் (CENTAC) மூலம் பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்குப் பெரும் போட்டி நிலவி வரும் சூழலில், கலந்தாய்வு தொடங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடும் போட்டி - காத்துக்கிடக்கும் மாணவர்கள்:
இந்தக் கல்வி ஆண்டில், புதுச்சேரியில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான 6,490 இடங்கள் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கான 4,320 இடங்கள் என மொத்தம் 10,810 இடங்கள் செண்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு மொத்தம் 12,885 மாணவர்கள் விண்ணப்பித்துத் தங்களின் உயர்கல்விக் கனவுகளுடன் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலையில், வரைவு தரவரிசைப் பட்டியல் (Draft Merit List) வெளியிடப்பட்டிருந்தாலும், இடங்களுக்கான விபரம் (Seat Matrix) மற்றும் இறுதி தரவரிசைப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் மாணவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
தேசிய அமைப்புகளின் கிடுக்கிப்பிடி காலக்கெடு:
இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை விரைந்து முடிக்க தேசிய அளவிலான கல்வி அமைப்புகள் கடுமையான கட்டுப்பாடுகளையும் காலக்கெடுவையும் விதித்துள்ளன:
பொறியியல் படிப்புகள்: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் பொறியியல் சேர்க்கையை முழுமையாக முடிக்க உத்தரவிட்டுள்ளது.
செவிலியர் படிப்புகள் (Nursing): தேசிய நர்சிங் கவுன்சில், செவிலியர் படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், இதற்கு எவ்வித காலநீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் கடுமையான காலக்கெடு நெருங்கி வருவதால், புதுச்சேரி மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. தங்களது பிள்ளைகளுக்கு அரசுப் பொது ஒதுக்கீட்டில் சீட் கிடைக்குமா என்ற சந்தேகத்தில், பல பெற்றோர்கள் வேறு வழியின்றி தனியார் கல்லூரிகளை அணுகி, கூடுதல் கட்டணம் செலுத்தி நிர்வாக ஒதுக்கீட்டில் (Management Quota) இடம்பிடிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தாமதத்திற்கு என்ன காரணம்? - செண்டாக் விளக்கம்:
இது குறித்து எழுந்துள்ள புகார்களுக்கு செண்டாக் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கலந்தாய்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செண்டாக் நிர்வாகம் ஏற்கனவே தயார் செய்துவிட்டதாகக் கூறியுள்ளனர். எனினும், இந்த ஆண்டு விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டில் (Sports Quota) கொண்டு வரப்பட்ட புதிய மாற்றங்களுக்கான அரசாணை (GO) வெளியாவதில் ஏற்பட்ட தாமதமே, ஒட்டுமொத்த கலந்தாய்வும் தள்ளிப்போக முக்கியக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
25-ஆம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு:
தற்போது விளையாட்டு வீரர்களுக்கான புதிய அரசாணை வெளியிடப்பட்டு, மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் இன்னும் நான்கு நாட்களுக்குள் நிறைவடைந்துவிடும். அதன் பிறகு விளையாட்டு வீரர்களுக்கான தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 25-ஆம் தேதிக்குப் பிறகு நீட் (NEET) அல்லாத அனைத்துப் படிப்புகளுக்கும் கலந்தாய்வு முறைப்படி தொடங்கி, இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். எனவே, மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், தங்களுடைய சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் நடத்த பெற்றோர் சங்கம் கோரிக்கை:
இது குறித்து செண்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் நாராயணசாமி கூறுகையில், "கலந்தாய்வு நடத்துவதில் ஏற்படும் தொடர் தாமதத்தால், தங்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் மாணவர்கள் தவிக்கின்றனர். தகுதியுள்ள ஏழை மாணவர்கள் கூட தனியார் கல்லூரிகளில் கூடுதல் பணம் செலுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, செண்டாக் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் கலந்தாய்வை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
