குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாளை வெளியிடாவிட்டால் உடனடியாக வெளியிட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலர் நாளை அறிக்கை தாக்க செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24ஆம் தேதி நடத்தப்பட்டது.


காலிப் பணியிடங்கள் உயர்வு


இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வெளியாகி இருந்தால் அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், தேர்வு முடிவுகள் தாமதமாகின. எனினும் காலிப் பணியிடங்கள் 10,117 ஆக உயர்த்தப்பட்டன. 


2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 8 மாதங்கள் கழித்து மார்ச் 24ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. கலந்தாய்வு தொடங்கத் தாமதமான நிலையில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கலந்தாய்வு நடைபெற்றது. 


இதற்கிடையே கொரோனா காலத்தில் தாமதமாக தேர்வு நடைபெற்றதால், காலிப் பணியிடங்களை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வருக்குக் கோரிக்கை மனுவையும் அனுப்பினர். எனினும் இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 


மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், ’’2022ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி குரூப் 4 தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. இதில், நாங்களும் தேர்வு எழுதினோம். இந்தத் தேர்வில் நாங் 250-க்கும் மேல் மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது.


விடைத் தாளை வழங்க அனுமதி


இந்த நிலையில் நாங்கள் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் எங்களின் விடைத் தாளை எங்களுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும். அதுவரை பணி இடங்களை காலியாக வைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 


இந்த வழக்கு இன்று (அக்.10) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் வெளியிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். விடைத்தாள் வெளியிடப்படாவிட்டால் உடனடியாக வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். விடைத்தாள் வெளியிடப்பட்டது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலர் நாளை அறிக்கை தாக்க செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து வழக்கு விசாரணையை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.