2025 - 2026ஆம் கல்வி ஆண்டு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுக்குரிய புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறி உள்ளதாவது:
தங்களது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து நடப்பு கல்வியாண்டு 2025–2026 மேல்நிலை பொதுத் தேர்வுகளுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துக்களை அனுப்பி வைக்க கோரி பாதுகாப்பு அறிக்கைகள் சேர்க்கப்பட வேண்டும்.
புதிய தேர்வு மையங்கள் கோரி கருத்துருக்கள் அனுப்பப் பெறப்படும்போது, திட்டவட்டமான தங்கள் குறிப்புரையுடன் கருத்துருக்கள் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்பட்ட புதிய தேர்வு மையங்கள் கருத்துருக்களை மதனமாக வைத்து கொள்ளுதல் வேண்டும்.
மேலும், 2025 மேல்நிலைத் தேர்விற்காக ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வுமையமாக செயல்பட வேண்டும் எனில் மீண்டும் கருத்துரு அனுப்பி, இயக்குநரின் ஆணை பெறவேண்டும். எக்காரணம் கொண்டும் கருத்துருவினை பழைய படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்புதல் கூடாது.
தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டுமா?
சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கி பரிந்துரைத்து அனுப்புதல் வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவிற்குப் பின் பெறப்படும் கருத்துருக்கள் ஆகியவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள், அரசாணையில் உள்ள விதிகளின்படி தேர்வு மையங்களாக செயல்பட தகுதியுள்ளதை உறுதி செய்த பின் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்யப்படும் பள்ளிகள் பற்றிய அனைத்து விவரங்களையும் சரியான முறையில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளைத் தேர்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும் அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்குப் பரிந்துரை செய்யப்படும்.
அரசுப் பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள்
10 கி.மீ. தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பரிந்துரை செய்யப்படும் புதிய தேர்வு மையங்கள் ஏதும் இல்லை எனில் “இன்மை அறிக்கை: அனுப்புதல் வேண்டும்.
தற்பொழுது தேர்வு மையங்களாக செயல்படும் மையங்களில், இரத்து செய்யப்பட வேண்டிய தேர்வு மையங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை உரிய காரணங்களுடன் பட்டியலிட்டு அனுப்புதல் வேண்டும்.
நடப்பு கல்வியாண்டு 2025-2026 பொதுத் தேர்விற்கு ஏற்கெனவே தேர்வு மையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள் / புதிய தேர்வு மையம் கோரும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.