அண்ணா பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக பொறுப்பேற்ற  வேல்ராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியது: 


பல்கலை கழகத்தின் கற்றல் கற்பித்தலில் மாற்றம் கொண்டு வரப்படும். பல்கலை கழகத்தின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.  20% சதவிகித மாணவர்களுக்கு புரியும் வகையில் மட்டுமே தற்போதை பாடத்திட்டங்கள் உள்ளது. எனவே பாடத்திட்டம் மறு சீரமைக்கப்படும். 20 வருடம் கழித்து அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் நோபல் பரிசு பெறக்கூடிய வகையில் அதற்கான வழிமுறைகள் ஏற்ப்படுத்தி தரப்படும். இனி தமிழ்நாடு அரசு சொல்கிற படி அண்ணா பல்கலை செயல்படும், என கூறினார். 




புதிய துணை வேந்தர் நியமனம்


அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் டாக்டர். ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டார். நியமனத்துக்கான ஆணையை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் குப்தா வழங்கினார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம்  முடிவடைந்த நிலையில் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியாற்றுபவர். தெர்மல் ஸ்டோரேஜ் துறையில் முனைவர் பட்டம் பெற்ற வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருபவர். 


புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பேராசிரியர் டாக்டர். வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து, 69% இடஒதுக்கீடு, அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிப்பது, கொரோனா பெருந்தொற்று  காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை உறுதிப்படுத்துவது  போன்ற பல்வேறு சிக்கல்களை  எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பத்தை கடந்த மே மாதம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையிலான தேடல் குழு வெளியிட்டது. துணைவேந்தர் பொதுவாக மூன்றாண்டு கால அளவுக்குப் பதவி வகிப்பார். இருப்பினும், துணைவேந்தராக பணியமர்த்தம் செய்யப்பட்ட ஒருவர் தம்முடைய அலுவலக பதவி காலத்தின் போது 70 வயதினை நிறைவு செய்தால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.        




துணை வேந்தரம் நியமன விதிகள் என்ன!


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம்  முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யூ) பல்கலை. துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களாக ஷீலா ராணி சுங்கத், சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி தியாகராஜன்  ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தகுதியும், அனுபவமும் வாய்ந்த விண்ணப்பத்தார்கள் அண்ணா பல்கலைக்கழக போர்ட்டலில் உள்ள விண்ணப்பப் படிவங்களை பதிவு இறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2021, ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்னதாக, nodalofficer2021@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மூன்று பெயர்களைக் கொண்ட தேர்வுப் பெயர் பட்டியலை வேந்தருக்கு தேடல் குழு பரிந்துரைக்கும். இதன், அடிப்படையில் தமிழக ஆளுநர் (வேந்தர்) அடுத்த துணைவேந்தரை  தேர்வு செய்வார் என்று சொல்லப்பட்டது.