பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகமாக மாற்றும்‌ சிறந்த பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்‌" வழங்கப்படும்‌ என சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ அறிவித்துள்ளார். இதில் விருது பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும்‌, இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும்‌, மூன்றாம்‌ பரிசாக ரூ. 3 லட்சமும்‌ வழங்கப்பட உள்ளது.


பிளாஸ்டிக் பயன்பாடும் அதன் கழிவுகளும் இயற்கைக்கே அச்சுறுத்தலாக மாறி வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை விலங்குகள் உட்கொண்டு கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றன. இவற்றின் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் குறைந்தபட்சம் குறைக்கவாவது வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


இந்த நிலையில், பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகமாக மாற்றும்‌ சிறந்த பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்‌" வழங்கப்படும்‌ என சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ அறிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:


"மீண்டும்‌ மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை அமைச்சர்‌ சட்டப்‌ பேரவையில்‌ 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில்‌, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும்‌ நெகிழியின்‌ (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகமாக மாற்றும்‌ சிறந்த பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்‌" வழங்கப்படும்‌ என அறிவித்து இருந்தார்‌.


3 சிறந்த பள்ளிகள்‌, 3 சிறந்த கல்லூரிகள்‌ மற்றும்‌ 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு விருது


இதன்படி ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்களான பிளாஸ்டிக்‌ கைப்பைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள்‌ துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின்‌ பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும்‌ 3 சிறந்த பள்ளிகள்‌, 3 சிறந்த கல்லூரிகள்‌ மற்றும்‌ 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள்‌ வழங்கப்படும்‌.


என்னென்ன பரிசுகள்?


விருது பெறுவோருக்கு, முதல்‌ பரிசாக ரூ.10 லட்சமும்‌, இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும்‌, மூன்றாம்‌ பரிசாக ரூ. 3 லட்சமும்‌ வழங்கப்படும்‌.


இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால்‌, பிளாஸ்டிக்‌ இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில்‌ முன்மாதிரியாக திகழும்‌ பள்ளிகள்‌/ கல்லூரிகள்‌/ வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள்‌ வழங்கப்படும்‌.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கான விண்ணப்பப்‌ படிவங்கள்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக இணையதளத்தில்‌ https://chennai.nic.in/ பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்‌.


குறிப்பு: 1) விண்ணப்ப படிவத்தில்‌ உள்ள இணைப்புகள்‌ தனிநபர்‌ / நிறுவனத்‌ தலைவரால்‌ முறையாக கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்‌.


2) கையொப்பமிட்ட பிரதிகள்‌ இரண்டு மற்றும்‌ குறுவட்டு (சிடி) பிரதிகள்‌ இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.


விண்ணப்பம்‌ சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.05.2024.


கூடுதல் விவரங்களுக்கு: https://chennai.nic.in/


இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.