பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைப் பிரதமர் மோடி சந்திக்கும் பரிக்‌ஷா பே சார்ச்சா ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தகவலை மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 


2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த முறை 6-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.


நேரடியாக நடைபெற்ற பரிக்‌ஷா பே சார்ச்சா


முதன்முறையாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியான “பரிக்‌ஷா பே சார்ச்சா 1.0”, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் உள்ள டால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களுடனான “பரிக்‌ஷா பே சார்ச்சா 2.0” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் அதே மைதானத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற “பரிக்‌ஷா பே சார்ச்சா 2020” கலந்துரையாடல் நிகழ்ச்சி டால்கடோரா மைதானத்தில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது.


இந்த சூழலில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற “பரிக்‌ஷா பே சார்ச்சா 2021” நிகழ்ச்சியில் உலகெங்கும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.


மாணவர்களுடன் சந்திப்பு


இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.




கலந்துகொள்வது எப்படி?


இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாணவர்கள், mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். 


பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சிக்கான முன்பதிவு டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிவு பெற்றது. இதையடுத்து, 2023ஆம் ஆண்டுக்கான பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி ஜனவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நாளில், பிரதமர் மோடி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாட உள்ளார். இந்தத் தகவலை மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.