சென்னை ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கோடைக்காலப் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ளனர்.


நாடு முழுவதும் ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியிலிருந்து மொத்தம் 28 மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (Council of Scientific & Industrial Research- CSIR) கோடைக்கால பயிற்சிக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர்.


பள்ளி மாணவர்களுக்கு சிஎஸ்ஐஆர் பயிற்சி


CSIR, பள்ளி மாணவர்களுக்கான அதன் முதன்மையான சிஎஸ்ஐஆர்-CSIR பிரச்சார திட்டத்தின் கீழ் மக்கள் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை மேம்படுத்துதல் (EPIC) முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே ஆர்வம், புதுமை மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக EPIC வடிவமைக்கப்பட்டுள்ளது.


இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தேசிய சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு வலுவூட்டுகிறது. CSIR Jigyasa EPIC ஹேக்கத்தான் 2024, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் சமூகப் பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான தளத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது.


ஆர்க்கிட்ஸ் பள்ளியில் இருந்து 14 செயல்திட்டங்கள்


நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சமர்ப்பிக்கப்பட்ட 960 திட்டங்களில், 7- 9ஆம் வகுப்புகள் ஜூனியர் பிரிவில் 42 செயல்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியிலிருந்து 14 செயல்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சுமார் 28 மாணவர்கள், ஒன் ஹெல்த் மற்றும் க்ளீன் அண்ட் கிரீன் எனர்ஜி என்ற இரண்டு குழுவை உருவாக்கி, பள்ளியின் கல்வித் துறையின் வழிகாட்டல் மற்றும் பராமரிப்பின் கீழ் 14 வெவ்வேறு திட்டங்களில் மாணவர்கள் பணியாற்றியுள்ளனர்.


குறிப்பாக ருத்ராஷ் தூடிகா, விவான் விவேக்நாத், மற்றும் எதன் பாண்டே ஆகியோர் சென்னை, துரைப்பாக்கம் கிளையில் இருந்து சிஎஸ்ஐஆர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜூலை 2024 முதல் ஹைப்ரிட் முறையில் இரண்டு மாத பயிற்சி அளிக்கப்படும்.


இதுகுறித்து ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியின் அகாடமிக்ஸ் துணை முதல்வர் டாக்டர் அன்னா மரியா நோரோன்ஹா கூறுகையில், “இந்தியாவின் மதிப்புமிக்க CSIR நிறுவன இன்டர்ன்ஷிப் மூலம், மாணவர்கள் சிந்தனை, அறிவியல் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் அற்புதமான பயணத்தை தொடங்குவார்கள். சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கத்தில் சிந்தனை, வடிவமைப்புகள், முன்மாதிரிகள், தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவுச் செயலிகள் போன்ற வடிவங்களில் தங்கள் பணியை வழங்குவார்கள்’’ என்று தெரிவித்தார்.


ஹைபிரிட் முறையில் 2 மாதப் பயிற்சி


ஜூலை மாதம் தொடங்கும் இந்த இரண்டு மாத பயிற்சி காலத்தில், மாணவர்களின் திட்டங்களை செயல்படுத்த உதவுவதற்கான ஆதாரங்கள் மற்றும் நிபுணர் உதவிகளை CSIR வழங்கும்.


மாணவர்கள் தங்கள் செயல்திட்டங்களில் பணியாற்ற ஆய்வகங்களுக்கு ஹைபிரிட் மாதிரியில் சென்று, முழுமையான கல்வி அணுகுமுறை, அனுபவம் மற்றும் விஞ்ஞானிகளிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவார்கள்.