தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி என்டெட் எனப்படும் தேர்வுக்கு அக்.22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் என்டெட் எனப்படும் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (NTET), இந்திய சித்தா, ஆயுர்வேதம், யுனாமி மருத்துவப் படிப்புகளில் முதுகலைப் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணியாற்றத் தகுதி ஆனவர்கள் ஆவர்.


புதிய தேதிகள் அறிவிப்பு


இந்த நிலையில், தேர்வுக்கு செப்.24ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போதுஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.


விண்ணப்பக் கட்டணத்தை அக்டோபர் 23ஆம் தேதி வரை செலுத்தலாம். அதேபோல விண்ணப்பங்களில் திருத்தங்களை அக்.25ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.




ஆங்கிலம், இந்தியில் தேர்வு


120 நிமிடங்களுக்கு ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


விண்ணப்பிப்பது எப்படி?


தேர்வர்கள் https://ntet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 


முன்பதிவு செய்யாமல் இருந்தால், போதிய விவரங்களை உள்ளிட்டு, முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். 


கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.nta.ac.in, https://exams.nta.ac.in/NTET/ ஆகிய இணைப்புகளை க்ளிக் செய்து அறிந்துகொள்ளலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.


வேறு சந்தேகங்களுக்கு: 011 4075 9000


இ மெயில் முகவரி: ntet@nta.ac.in