இளங்கலை நீட் தேர்வு எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையோடு, பல் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் பொருந்தும் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நீட் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்ஸி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
யாருக்கெல்லாம் பொருந்தும்?
இந்த நிலையில், இளங்கலை நீட் தேர்வு எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையோடு, பல் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் பொருந்தும் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் இருந்ததுபோல ஆன்லைன் முறையில் அல்லாது பேனா – காகித முறையில், ஒரே ஷிஃப்ட்டில் நீட் தேர்வு நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்து இருந்தது.
இந்த ஆண்டு மாற்றங்கள் ஏதேனும் இருக்குமா?
இந்த நிலையில் பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் (BDS மற்றும் BVSc & AH) சேரவும் நீட் தேர்வு மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இது ஏற்கெனவே இருந்த முறைதான் என்றாலும் , இந்த ஆண்டு மாற்றங்கள் ஏதேனும் இருக்குமா என்று கேள்வி எழுந்தது. எனினும் மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று என்டிஏ விளக்கம் அளித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வில் கலந்துகொள்ளும் தேர்வர்கள், என்டிஏ விரைவில் வெளியிட உள்ள அறிவிக்கை மூலம் முழுத் தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். www.neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் இந்தத் தகவல்களைப் பெறலாம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.
அதேபோல 011 - 40759000 என்ற தொலைபேசி எண் மூலமும் neetug2025@nta.ac.in இ- மெயில் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: www.neet.nta.nic.in