Kerala Sharon Raj murder case: கேரளாவில் ஷரோன் ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரீஷ்மாவுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.


மரண தண்டனை விதித்த நீதிமன்றம்:


கொலை, விஷத்தால் தீங்கு விளைவித்தல், கொலைக்கு கடத்தல், சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் கிரீஷ்மா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டத தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றவாளியான கிரீஷ்மாவின் மாமா நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 






கொலை முயற்சிகள்:


கன்னியாகுமரியில் வசித்த வந்த கிரீஷ்மா கடந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, திருவனந்தபுரம் பாரசால பகுதியை சேர்ந்த இளநிலை 3-ம் ஆண்டு பயின்று வந்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகள் அவர்கள் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிரீஷ்மாவுக்கு, கடந்த 2022ம் ஆண்டு ராணுவ அதிகாரி மாப்பிள்ளை உடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கு கிரீஷ்மாவும் சம்மதித்தார்.


இதையடுத்து காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, பல வழிகளை கிரீஷ்மா யோசித்தார். அதன்படி ஷரோன் ராஜை ரகசியமாக கொலை செய்ய முடிவு செய்தார். சக்தி வாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து கொல்வதற்காக, அதன் விவரங்களை இணையதளத்தில் தேடினார். பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் அதிருஷ்டவசமாக ஷரோன் ராஜ் உயிர் தப்பியுள்ளார்.


குற்றவாளி என அறிவிப்பு:


கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரொன் ராஜை, கிரீஷ்மா தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆயூர்வேத பானம் என கூறி ஷரோன் ராஜ்க்கு கிரீஷ்மா ஒரு பானத்தை கொடுத்துள்ளார். குடித்ததும் கசப்பாக இருக்கிறதே என கேட்க,  ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என கரிஷ்மா சொன்னதை ஏற்று முழுவதுமாக குடித்துள்ளார். ஆனால், மூலிகை விஷம் கலக்கப்பட்ட அந்த பானத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றவர், இரவில் பலமுறை வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ் , உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார். இதையடுத்து அவரது குடும்பம் கிரீஷ்மா மீது புகார் அளித்தது. 


தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்த கிரீஷ்மா ஜாமினில் வெளியேவந்தார். அதேநேரம், வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கிரீஷ்மா கொலை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அதனடிப்படையில் அவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.