தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் ஒவ்வொரு மாணவரும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


முன்னதாக தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருவதாக நாளிதழில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக்‌ கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:‌


''தமிழ்நாட்டில்‌ இரு மொழிக்‌ கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌ தமிழ்நாடு அரசு பள்ளிக்‌ கல்வி பாடத்திட்டத்தில்‌ நீண்ட காலமாக அமலில்‌ உள்ள இரு மொழிக்‌ கொள்கையை மாற்றி மும்மொழிக்‌ கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கைகள்‌ சத்தமின்றித் தொடங்கியுள்ளதாக நாளிதழ்‌ ஒன்றில்‌ செய்தி வெளியாகி உள்ளது.


தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக்‌ கொள்கையை பல்வேறு காலகட்டங்களில்‌ தெளிவுபடுத்தியுள்ளது. தாய்மொழியாகிய தமிழ்‌, உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம்‌ என இரு மொழிக்‌ கொள்கை மட்டுமே வழக்கத்தில்‌ இருந்து வருகிறது.


2006 ஆம்‌ ஆண்டின்‌ தமிழ்நாடு (தமிழ்‌ மொழி கற்கும்‌) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும்‌ பத்தாம்‌ வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயப்‌ பாடமாகக் கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும்‌ தெலுங்கு, கன்னடம்‌, மலையாளம்‌, உருது என தமிழைத் தாய் மொழியாகக்‌ கொள்ளாத மாணவர்களும்‌ தமிழ்‌ மொழியுடன்‌ சேர்த்து, அவர்தம்‌ தாய்மொழியையும்‌, விருப்பப் பாடமாகப்‌ படித்து, தேர்வு எழுதும்‌ முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.




எனவே, தமிழ்நாடு அரசால்‌ ஐயமற தெளிவுப்படுத்தப்பட்ட மொழிப்‌ பாடக்‌ கொள்கை குறித்து உண்மைக்குப்‌ புறம்பாக மக்களைத் தவறாக வழிநடத்தும்‌ செய்திகளை நம்பவேண்டாம்‌''.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 


முன்னதாக தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி மத்திய அரசு நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை திட்டத்தை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் ஆளும் திமுக அரசு தலைமையில் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அந்த வகையில் பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண