4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்து இருந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேசிய, மாநிலப் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், என்ஐடிகள், அரசுக் கல்லூரிகளில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதில், இரட்டை மேஜர் படிப்புகள், குறிப்பாக பள்ளி அளவிலான கல்வி மற்றும் குறிப்பிட்ட துறைசார் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் எங்கே?
தமிழ்நாட்டில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, பிஎட் என்ற பெயரில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்ஐடி திருச்சியில், பி.ஏ., பிஎட் என்ற பெயரில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கும் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொது நுழைவுத் தேர்வு
இவற்றில் சேர தேசிய பொது நுழைவுத் தேர்வு (National Common Entrance Test - NCET) நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 13 வகையான மொழிகளில் 178 நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. கணினி முறையில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
2025ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்து இருந்தது. மார்ச் 18 – 19ஆம் தேதிகளில் விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விண்ணப்பிக்க அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வு மைய விவரம் வெளியிடப்படும். அனுமதிச் சீட்டு தேர்வுக்கு 3, 4 நாட்கள் முன்னதாக வெளியாகும். என்சிஇடி தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://exams.nta.ac.in/NCET/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை, தேர்வு மைய விவரங்கள், வினாத்தாள், இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த முழு தகவல்களுக்கு: https://exams.nta.ac.in/NCET/images/public-notice-for-inviting-online-application-of-ncet-2025-dated-20-feb-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://exams.nta.ac.in/NCET/
தொலைபேசி எண் - 011-4075 9000
இ மெயில் முகவரி - ncet@nta.ac.in