Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
இதுபோக என்சிஇஆர்டி, ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.

என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களின் விலையை 20 சதவீதம் குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லியில் என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என்சிஇஆர்டி தலைமைச் செயலகத்தில், ஆடிட்டோரியம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. அந்த நிகழ்வில் இயக்குநர் கலந்துகொண்டு பேசினார். அடுத்தடுத்த கல்வி ஆண்டில் இருந்து இந்த விலைக் குறிப்பு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு விலைக் குறைப்பு?
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் கூறும்போது, என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலை 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இவை 2026- 27 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் தலா ரூ.65-க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடப்புத்தகம் அச்சடிப்பதற்குத் தேவையான காகித கொள்முதல் மற்றும் பிரிண்ட்டர்கள் அண்மையில் நவீன தரத்தில் வாங்கப்பட்டன. இதன் பலன் மாணவர்களுக்குச் சென்று சேர வேண்டுமென்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஃபிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இதுபோக என்சிஇஆர்டி, ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களிலும் குறைந்த விலையில் பாட நூல்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300 தலைப்புகளில், 4 முதல் 5 கோடி பாடப் புத்தகங்களை என்சிஇஆர்டி அச்சிடுகிறது. அடுத்த கல்வி ஆண்டில் 15 கோடி பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க என்சிஇஆர்டி திட்டமிட்டுள்ளது.
இதுவே முதல் முறை
பாடப் புத்தகங்களின் விலை இவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று என்சிஇஆர்டி இயக்குநர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?