பத்து இலட்சம்‌ மக்களுக்கு 100 மருத்துவ இடங்கள்‌ என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின்‌ அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்‌” என்ற பழமொழியை கருத்தில் கொண்டு, இயன்ற வரை நோய்‌ இல்லா வாழ்வை மக்கள்‌ பெறுவதை உறுதிசெய்யும்‌ வகையில்‌ பல்வேறு முன்னோடித்‌ திட்டங்களை அறிவிப்பதிலும்‌, புதிதாக மருத்துவக்‌ கல்லூரிகளை துவக்குவதிலும்‌, மருத்துவ இருக்கைகளை அதிகரிப்பதிலும்‌, மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிக அக்கறை செலுத்தி வந்தார் என்பதையும்‌, பிரதமரும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சிக்‌ காலத்தில்‌, தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில்‌ 11 அரசு மருத்துவக்‌ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி சிறப்பித்தார் என்பதையும்‌ தமிழ்நாட்டு மக்கள்‌ நன்கு அறிவார்கள்‌. 


இந்த நிலையில்‌, 2023-2024 ஆம்‌ கல்வியாண்டிற்குப்‌ பிறகு, புதிதாக மருத்துவக்‌ கல்லூரி துவங்க அனுமதி அளிக்கப்படும்போது, 50, 100, 150 என்ற எண்ணிக்கையில்தான்‌ அனுமதி அளிக்கப்படும்‌ என்றும்‌, 150 இருக்கைகளுக்கு மேல்‌ அனுமதி அளிக்கப்படாது என்றும்‌, பத்து இலட்சம்‌ மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகள்‌ என்ற குறியீட்டை மருத்துவக்‌ கல்லூரிகள்‌ பின்பற்ற வேண்டும்‌ என்றும்‌ தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) தெரிவித்துள்ளது.


தரமான மருத்துவச்‌ சேவை 


இந்தியாவிலேயே அதிக மருத்துவ இருக்கைகள்‌ கொண்ட மாநிலம்‌ தமிழ்நாடுதான்‌ என்று புள்ளிவிவரங்கள்‌ தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில்‌ 37 அரசு மருத்துவக்‌ கல்லூரிகள்‌, 35 தனியார்‌ மருத்துவக்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ தனியார்‌ பல்கலைக்கழக மருத்துவக்‌ கல்லூரிகள்‌ என 72 மருத்துவக்‌ கல்லூரிகள்‌ உள்ளன. இந்தக்‌ கல்லூரிகள்‌ மூலம்‌ ஆண்டிற்கு கிட்டத்தட்ட 11,600 மாணவ, மாணவியர்‌ மருத்துவம்‌ பயின்று வருகின்றனர்‌. இருப்பினும்‌, அனைத்துத்‌ தரப்பு மக்களுக்கும்‌ தரமான மருத்துவச்‌ சேவை கிடைக்க வேண்டுமென்றால்‌ மருத்துவர்களின்‌ எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்‌ என்ற சூழ்நிலை தமிழ்நாட்டில்‌ நிலவுகிறது.


இந்தச்‌ சூழ்நிலையில்‌, பத்து இலட்சம்‌ மக்களுக்கு 100 இருக்கைகள்‌ என்ற விகிதாச்சாரம்‌ பின்பற்றப்பட வேண்டுமென்று தேசிய மருத்துவ ஆணையம்‌ அறிவித்துள்ளது தென்‌ மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில்‌, தமிழ்நாட்டின்‌ மொத்த மக்கள்‌ தொகை சுமார்‌ 8 கோடி என்றிருக்கின்ற நிலையில்‌, தேசிய மருத்துவ ஆணையத்தின்‌ புதிய அறிவிக்கையின்படி, 8,000 மருத்துவ இருக்கைகள்தான்‌ இருக்க வேண்டும்‌. ஆனால்‌, தமிழ்நாட்டில்‌ கூடுதலாக 3,600 மருத்துவ இடங்கள்‌ உள்ளன. 


அதிமுகவே காரணம்


இவ்வாறு கூடுதலாக மருத்துவ இடங்கள்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சிக்‌ காலத்தில்‌ அதிகமாக மருத்துவக்‌ கல்லூரிகள்‌ துவங்கப்பட்டதும்‌, மக்கள்‌ தொகைப்‌ பெருக்கத்தை கட்டுப்படுத்தியதும்தான்‌ என்று சொன்னால்‌ அது மிகையாகாது.


மக்கள்‌ தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்ற மத்திய அரசின்‌ திட்டத்தை செயல்படுத்திய சிறந்த மாநிலங்களில்‌ தமிழ்நாடும்‌ ஒன்று என்ற நிலையில்‌, சிறப்பான மாநிலத்தை பாதிக்கும்‌ வகையிலான முடிவினை தேசிய மருத்துவ ஆணையம்‌ அறிவித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கும்‌ செயல்‌.


அதிகரிக்க முடியாத சூழ்நிலை


தேசிய மருத்துவ ஆணையத்தின்‌ இந்த நடவடிக்கை காரணமாக, இனி வருங்காலங்களில்‌ புதிதாக மருத்துவக்‌ கல்லூரிகளை துவக்கவோ அல்லது மருத்துவ இருக்கைகளை அதிகரிக்கவோ முடியாத சூழ்நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.


எனவே, “பத்து இலட்சம்‌ மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகள்‌” என்ற நிபந்தனையை தேசிய மருத்துவ ஆணையம்‌ ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்‌, இதற்குத்‌ தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சா்‌ கொடுக்க வேண்டுமென்றும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.


இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம்‌ தெரிவித்துள்ளார்.