அதிமுக அரசு தொடங்கிய நம்ம ஸ்கூல் திட்டத்துக்கு ஸ்டிக்கர்‌ ஒட்டி, அதற்கான‌ விழாவிற்கு  திமுக அரசு ரூ.3 கோடியை வீணடித்துள்ளதாக, தமிழ்‌நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 


’’அதிமுக‌ அரசில்‌ துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயிண்ட்‌ அடித்து ஸ்டிக்கர்‌ ஒட்டும்‌ வேலையில்‌ ஈடுபட்டுள்ள இந்த செயல்‌ திறனற்ற விடியா திமுக அரசு, பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்‌.ஆர்‌. எனப்படும்‌ நிறுவனங்களின்‌ சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில்‌ “நம்ம ஸ்கூல்‌” என்று நாமகரணம்‌ சூட்டியுள்ளது. இந்த விடியா அரசின்‌ முதலமைச்சர்‌ மீண்டும்‌ அதை, கடந்த 19.12.2022 அன்று‌ துவக்கி வைத்திருக்கிறார்‌.


23.5.2017 அன்று பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன்‌ அரசுப்‌ பள்ளிகளின்‌ உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்‌ வகையில்‌, தொழிலதிபர்களுடன்‌ ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்‌. இதன்படி 2019-ஆம்‌ ஆண்டு ஜூன்‌ மாதம்‌ முதல்‌ வாரம்‌ வரை
சுமார்‌ 82 கோடி ரூபாய்‌ சி.எஸ்‌.ஆர்‌. நிதியாக வரப்பெற்றது.


சிஎஸ்ஆர் நிதி


இந்திய நிறுவனச்‌ சட்டம்‌ 2019-ன்‌ படி, பெரிய தொழில்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்கள்‌ அவற்றின்‌ லாபத்தில்‌ இரண்டு விழுக்காடு (2%) தொகையினை சமூகப்‌ பொறுப்புச்‌ செயல்பாடுகளில்‌ (Corporate Social Responsibilities) பயன்படுத்த வேண்டும்‌ என்று முறை வகுக்கப்பட்டது.


அரசுப்‌ பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும்‌ ஆர்வத்துடன்‌ இருந்த தொழில்‌ நிறுவனங்களுக்கும்‌, ஆர்வலர்களுக்கும்‌, முன்னாள்‌ பள்ளி மாணவர்களுக்கும்‌ எளிய, நம்பகத்தன்மை கொண்ட இணைய வழித்தடமும்‌ ஏற்படுத்தும்‌ விதமாக, நான்‌ 5.11.2019 அன்று தலைமைச்‌ செயலகத்தில்‌, இணையவழி நிதி திரட்டும்‌ இணைய தளத்தை (https://contribute.tnschools.gov.in) தொடங்கும்‌ விழாவை எளிமையாகத் தொடங்கி
வைத்தேன்‌.


பொதுமக்கள்‌ நேரடியாக அறிந்துகொள்ளும்‌ வசதி


இணைய வழியில்‌ திரட்டப்படும்‌ நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக்‌ கணக்கில்‌ பெறப்படுவதுடன்‌, அந்த நிதி தொடர்பான விவரங்களை பொதுமக்கள்‌ இணையவழியில்‌ நேரடியாக அறிந்துகொள்ளும்‌ வசதியும்‌ செய்யப்பட்டது. இவ்வாறு திரட்டப்படும்‌ நிதிக்கு தமிழ்நாடு பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ தொடர்பு அலுவலகமாகச்‌ செயல்படும்‌ என்றும்‌, அக்கழகத்தின்‌ பொருளாளரும்‌, செயலாளரும்‌ தொடர்பு அலுவலர்களாக இருந்து நிதி மேலாண்மை செய்வார்கள்‌ என்று அரசு செய்திக்‌ குறிப்பும்‌ வெளியிடப்பட்டது.


தமிழக மக்களுக்கு நன்மைகளை வழங்கிய பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்வதில்‌ குறியாக இருந்த, சந்தர்ப்பவசத்தால்‌ ஆட்சிக்கு வந்த இந்த விடியா திமுக அரசு, வெற்றிகரமாக செயல்பட்டு வந்த இத்திட்டத்தையும்‌, இத்திட்டத்திற்காக தனியாகத் துவக்கப்பட்ட இணையதளத்திற்கும்‌ மூடுவிழா நடத்தியது.


எனினும்‌ தொழிலதிபர்கள்‌ மற்றும்‌ முன்னாள்‌ மாணவர்கள்‌ அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க தொடர்ந்து பள்ளிக்‌ கல்வித்‌ துறை அதிகாரிகளை அணுகத்‌ தொடங்கியதன்‌ அடிப்படையில்‌, அதிமுக‌ அரசு கொண்டு வந்த இத்திட்டத்திற்கு தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி, “நம்ம ஸ்கூல்‌” என்ற தங்கிலீஷில்‌ பெயரை வைத்து இத்திட்டத்தை மீண்டும்‌ துவக்கியுள்ளனர்.




நட்சத்திர ஓட்டலில்‌ தொடக்க விழா


எனது ஆட்சிக்‌ காலத்தில்‌ எளிமையாக துவக்கி வைக்கப்பட்ட, அரசுப்‌ பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும்‌ இத்திட்டத்தை பெயர்‌ மாற்றம்‌ செய்து, நட்சத்திர ஓட்டலில்‌ நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார்‌ 3 கோடி ரூபாய்‌ செலவழிக்கப்பட்டதாக நேற்றைய நாளிதழ்களில்‌ செய்தி வெளிவந்துள்ளது. அரசின்‌ நிதி நிலைமை தள்ளாட்டத்தில்‌ உள்ளது என்று கூறும்‌ இந்த அரசு, மூன்று கோடி
ரூபாயை வீணடித்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஏன்‌ ?


சொல்‌ ஒன்று, செயல்‌ ஒன்று எனவும்‌, சித்தம்‌ போக்கு-சிவம்‌ போக்கு என்றும்‌ செயல்படும்‌ இந்த விடியா அரசு, மக்களுக்கு பதில்‌ சொல்லும்‌ காலம்‌ விரைவில்‌ வரும்‌’’.


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.