மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர்‌. இராதாகிருஷ்ணன்‌ விருது 2025-க்கு, EMIS இணையதளத்தில்‌ விண்ணப்பப்‌ பதிவேற்றம்‌ செய்யலாம் எனவும் அதற்குத் தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாரத முன்னாள்‌ குடியரசுத்தலைவர்‌ டாக்டர். இராதா கிருஷ்ணன்‌ பிறந்தநாள்‌ செப்டம்பர்‌ மாதம் 5-ஆம்‌ நாள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ சார்பாக ஆசிரியர்‌ தின விழாவாகக்‌ கொண்டாடப்படுகிறது.

யாரெல்லாம் தேர்வு செய்யப்படுவர்?

அவ்விழாவில் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகள்‌ / ஆங்கிலோ இந்தியப்‌ பள்ளிகள்‌/ சமூக பாதுகாப்புத்துறை /ஆதி திராவிடர்‌ பழங்குடியினர்‌ நலத்துறை மற்றும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ பள்ளிகளில்‌ சிறப்பாகப்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான “டாக்டர்‌. இராதாகிருஷ்ணன்‌ விருது" வழங்கப்பட்டு அவர்களுக்கு ரூ.10.000/- (ரூபாய்‌ பத்தாயிரம்‌ மட்டும்‌) ரொக்கப்பரிசும்‌, ரூ.2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும்‌, பாராட்டுச் சான்றிதழ்‌ மற்றும்‌ பயணப் படியும்‌ வழங்கப்பட்டு வருகிறது.

EMIS இணையதளம்‌ வாயிலாக

அதன்படி 2025 ஆம்‌ ஆண்டிற்கான டாக்டர்‌. இராதாகிருஷ்ணன்‌ விருது வழங்கும்‌ விழா 05.09.2025 அன்று நடைபெற உள்ள நிலையில்‌, அதற்கான விண்ணப்பங்கள்‌ EMIS இணையதளம்‌ வாயிலாக வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌/ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ (தொடக்கக்கல்வி, இடைநிலை, தனியார்‌ பள்ளிகள்‌) (முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ நிலையில்‌ பரிசீலிக்கப்பட்டு பெறப்பட உள்ளது.

எனவே கடந்தாண்டைப்‌ போலவே இவ்வாண்டும்‌ இதற்கான பணிகள்‌ அனைத்தையும்‌ மேற்கொண்டு விண்ணப்பிக்கத்தக்க வகையில்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ தலைமை ஆசிரியர்களை தயார்‌ நிலையில்‌ வைத்திருக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

எமிஸ் இணையதளம்‌ வழியாக விண்ணப்பத்தினை பதிவேற்றம்‌ செய்யும்‌ நாள்‌ பின்னர்‌ தெரிவிக்கப்படும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

386 பேருக்கு விருதுகள்

இந்த ஆண்டு 342 அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்​கள், மாவட்​டத்​துக்கு ஒரு​வர் வீதம் 38 தனி​யார் பள்ளி ஆசிரியர்​கள், ஆங்கிலோ இந்​திய பள்​ளி​கள், சமூக பாது​காப்​புத் ​துறை பள்​ளி​கள், மாற்​றுத்​திற​னாளி ஆசிரியர்​களில் தலா 2 பேர் என மொத்​தம் 386 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்​கப்பட உள்​ளன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

விருதுக்கு விண்​ணப்​பிக்​கும் ஆசிரியர்​கள் குறைந்​தது 5 ஆண்​டு​கள் பணி அனுபவம் பெற்​றிருக்க வேண்டும். எவ்​வித குற்​றச்​சாட்​டுக்​கும், ஒழுங்கு நடவடிக்​கைக்​கும் உள்ளாகதவராக இருக்க வேண்​டும்.

வகுப்​பறை​யில் கற்​பித்​தல் பணி​யில் ஈடு​படும் ஆசிரியர்​களுக்கு மட்டுமே விருது வழங்​கப்​படும். அலு​வல், நிர்வாகப் பணி​களை செய்யும் ஆசிரியர்​கள் விண்​ணப்​பிக்​கக முடியாது. அரசியல் கட்​சிகளு​டன் தொடர்​புடைய​வராக இருக்கக் கூடாது. தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாது என்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.