பல லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வழங்கும் சந்திரயான் 3 மகா வினாடி வினா போட்டிக்கு முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஆர்வமுள்ள தேர்வர்கள் அக்டோபர் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். 


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம்.


இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது. 


இந்த நிலையில், சந்திரயான் 3 மகா வினாடி வினா போட்டிக்கு முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஆர்வமுள்ள தேர்வர்கள் அக்டோபர் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். 


என்னென்ன கேள்விகள்?


சந்திரயான் 3  திட்டம் மற்றும் வான் அறிவியல் குறித்து கேள்விகள் இருக்கும். நாட்டின் வானியல் முயற்சிகள் மற்றும் வெற்றிகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ளவும் அவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தவும் வினாடி வினா போட்டி திட்டமிட்டுள்ளது. அதேபோல விண்வெளி முயற்சிகள் குறித்து மாணவர்கள் அதிகம் அறிந்துகொள்ளவும் வினாடி வினா ஆர்வத்தை உருவாக்குகிறது. 


யார் நடத்துகிறார்கள்?


இஸ்ரோ நிறுவனத்துடன் சேர்ந்து MyGov சந்திரயான் 3 வினாடி வினா போட்டியை நடத்துகிறது. இதில் விண்வெளி அறிவியல், பொது அறிவு மற்றும் வானியல் ஆய்வு குறித்த பொது அறிவுக் கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்வியும் 4 தெரிவுகளைக் கொண்டிருக்கும். அதில் சரியான விடையைத் தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டும். 


300 விநாடிகளில் 10 கேள்விகளுக்குத் தேர்வர்கள் பதிலளிக்க வெண்டும். இதில் சிறப்பாக பதில் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். இரண்டாவது வெற்றியாளருக்கு 75 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது வெற்றியாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வாங்கப்படும். 


அடுத்த 100 சிறப்பான செயல்திறன் கொண்டவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. அடுத்த 200 சிறப்பான செயல்திறன் கொண்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வினாடி வினா போட்டி நடத்தப்படுவது குறித்தும் அதில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  


கூடுதல் தகவல்களுக்கு: https://isroquiz.mygov.in/