உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.  


பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோலவே உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும், டாக்டர் ராதாக்ருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் விருது வழங்கப்படும். குடியரசுத் தலைவர் இந்த விருதை வழங்க உள்ளார். இதுகுறித்து யுஜிசி அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. 


பாலிடெக்னிக், ஐடிஐ, பிரதம மந்திரி இளைஞர் பயிற்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ஐடிஐ, பாலிடெக்னிக் ஆசிரியர்கள் 25 பேருக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. உயர் கல்வி நிறுவன ஆசிரியர்கள் 25 பேருக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. உடன் சான்றிதழும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது.


எனினும் இது 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டு, பொறியியல் & தொழில்நுட்பம், கட்டிடக்கலை ஆசிரியர்கள் முதல் பிரிவாகவும், கணிதம், இயற்பியல், உயிரியல், ரசாயன அறிவியல், மருத்துவம், மருந்தகம்  உள்ளிட்ட  முழுமையான அறிவியல் பிரிவு ஆசிரியர்களுக்கு (Pure Sciences) இரண்டாவது பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக, கலை மற்றும் சமூக அறிவியல், மனிதநேயம், மொழிகள், சட்ட ஆய்வுகள்,வணிகம், மேலாண்மை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஜூலை 30 கடைசித் தேதி ஆகும். 


என்ன தகுதி?


* ஆசிரியர்கள் முழுநேரம் பணிபுரிபவராக இருக்க வேண்டும். 
* குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியும். 
* 55 வயதைக் கடந்தவர்களாக இருக்கக்கூடாது. 
* துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் விண்ணப்பிக்க முடியாது. 


விண்ணப்பிப்பது எப்படி?


ஆசிரியர்கள் nat.aicte-india.org என்ற இணைப்பை க்ளிக் செய்து, விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில், முன்பதிவு (Register) என்னும் பகுதியில், எந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறீர்கள் என்பதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதைக் குறிப்பிட்ட பிறகு கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.  


லாகின் செய்ய... 


* ஆசிரியர்கள் https://nat.aicte-india.org/login என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 
* அதில், மெயில் ஐடி, கடவுச் சொல்லைப் பதிவிட்டு, லாகின் செய்ய வேண்டும். 
* பிறகு தேவையான விவரங்களை உள்ளிட்டு, விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 


விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று படிப்படியாக அறிந்துகொள்ள https://natapi.aicte-india.org/files/User_Manual_NTA.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.  


விண்ணப்பப் படிவத்தை முழுவதுமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்,. எந்த பகுதியையும் காலியாக விடக்கூடாது. அனைத்து விண்ணப்பங்களும் சுய சான்றிதழ் (self-attested documentary evidences) அளிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும்.முழுவதுமாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் தகுதியற்றவையாகக் கருதப்பட்டு, நிராகரிக்கப்படும். 


தங்களுடைய சாதனைகள், செயல்பாடுகள் குறித்த 800 வார்த்தைகள் அடங்கிய ஆவணத்தையும் ஆசிரியர்கள் இணைக்க வேண்டும் 


விருது வழங்குவது குறித்தான விதிமுறைகளை விரிவாக அறிந்துகொள்ள https://natapi.aicte-india.org/files/Guidelines.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.