பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன்தலைமையில் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கூட்ட அரங்கில் இன்று பள்ளிக் கல்வித் துறையின் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’இந்த ஆண்டு தேர்ச்சி பெறாத, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு கற்றலை வழங்க என்ன செய்ய வேண்டும் என்று பேசி இருக்கிறோம். மாணவர்களுக்கு ஏஐ, கோடிங், ஏ.ஆர்., பைத்தான், ஜேடூஇ உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ஏஐ கோடிங் பயிற்சியை 5 ஆயிரம் பள்ளிகளுக்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் மனநலன்
மாணவர்களின் மன நலனைக் காக்க வேண்டியது எல்லோரின் கூட்டுப் பொறுப்பு. அது போதையின் பாதைக்குச் செல்லாமல் தடுக்க உதவும்.
இரண்டாவது பள்ளி கட்டமைப்பு
பள்ளி வகுப்பறை முதல் கழிப்பறை வரை பிரச்சினை வந்தால் சரிசெய்வதை விட, பிரச்சினையே வராமல் பார்த்துக்கொள்வது இலக்காக உள்ளது.
மூன்றாவது உணவு
மாதிரிப் பள்ளிகள், வெற்றிப் பள்ளிகளில் மாணவர்களின் உணவு குறித்து கவனம் செலுத்த கூறியிருக்கிறோம்.
ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை தேர்ச்சி விகிதம் கூடியிருக்கிறது.
இதையும் வாசிக்கலாம்: Re NEET 2026: நீட் மறு தேர்வு; மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பை அறிவித்த NTA- கால அவகாசம் நீட்டிப்பு!
போக்குவரத்து நடத்துநர்கள் கனிவாக நடந்துகொள்ளுங்கள்
பள்ளிக்கு மாணவர்கள் வரும்போதும் திரும்பச் செல்லும்போதும் மக்களும் தன்னார்வலர்களும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து நடத்துநர்கள் இன்னும் கொஞ்சம் கனிவாக மாணவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
அறிவியலுக்குப் புறம்பான எந்த விஷயங்களுக்கும் பள்ளியில் இடம் கிடையாது. தன்னம்பிக்கை, அறிவியல், பகுத்தறிவு கொண்ட யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்கிறோம். முன்னாள் மாணவர்களை அம்பாசிடர்களாக அழைக்க உள்ளோம். போதையின் பாதை பள்ளி, கல்லூரிகளை அணுகாதவாறு செயல்படுவோம்.
மதம், சாதி சார்ந்த அடையாளங்களுக்கு நோ!
மதம், சாதி சார்ந்த அடையாளங்களோடு யாருமே பள்ளி வளாகத்துக்குள் வரக்கூடாது. கயிறாக இருந்தால்கூட அனுமதி கிடையாது. இங்கு சமூக நீதிக்கு மட்டுமே இடம். தமிழகப் பள்ளி வளாகங்களில் சமூக நீதி, அறிவியல் மற்றும் அடுத்த தலைமுறையினரின் கல்வி மேம்பாடு ஆகிய மூன்றிற்கு மட்டுமே இடம் உண்டு. பிரிவினையையோ, வேற்றுமையையோ வளர்க்கும் எதற்கும் இங்கு இடமில்லை.
நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் அறிக்கையை முழுமையாக அடியாழம் வரை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம். தனியார் பள்ளிகளுக்கு எவ்வித முறைமுகக் கட்டணமும் அரசு தரப்பிலோ, மூன்றாம் தரப்பிடம் இருந்தோ விதிக்கப்படாது. அதனால் பள்ளிகள் தங்களின் கட்டணத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்’’.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.
