விழுப்புரம் : தமிழகத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த விழுப்புரத்தை சார்ந்த ரஜனீஷ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் பயில உள்ளதாகவும் சிறுவயது முதல் மருத்துவர் ஆக வேண்டுமென லட்சியமாக கொண்டு பயின்றதாக தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டியலை வெளியிட்டார்.


இதில் விழுப்புரம் மாணவர் ரஜனிஷ் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை, அயனப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் சையது ஆரிஃபின், சேத்துப்பட்டைச் சேர்ந்த மாணவி ஷைலஜா ஆகியோர் அடுத்தடுத்து 2, 3ஆவது இடங்களைப் பெற்றுள்ளனர்.


ரஜனீஷ்க்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய பெற்றோர் 



நீட் தேர்வினை தமிழகத்தில் இந்தாண்டு 1,52,920 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 89,198 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். நீட் தேர்வில் தமிழகத்தில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரஜனீஷ் என்ற மாணவன் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் முதல் மதிப்பெண்ணான 720க்கு 720 மதிப்பெண் பெற்றிருந்தார். இன்று வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் முதல் ரஜனீஷ்  இடம்பிடித்துள்ளதால் மாணவனின் பெற்றோர் ரஜனீஷுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழக அளவில் முதலிடம்


தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் பயில உள்ளதாக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவன் ரஜனீஷ்  தெரிவித்துள்ளான். மேலும் நீட் தேர்வினை பொருத்தவரை மாக் டெஸ்ட் அதிகம் எழுதினால் தேர்வினை எழுதுவது சுலபமாக இருக்கும் என்றும் புத்தகத்தில் ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும் எனவும் பதினோராம் வகுப்பிலிருந்து கோச்சிங் செண்டர் மூலம் பயிற்சி மேற்கொண்டு முதல் முயற்சியிலையே நீட் தேர்வில் வெற்றி பெற முடிந்ததாக மாணவர் ரஜனீஷ்  கூறியுள்ளார். சிறுவயது முதல் மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் கல்வி பயின்றதாகவும் ரஜனீஷ் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை இடங்கள்?


தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை 9,800 எம்பிபிஎஸ், 2150 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த இடங்களுக்கு 43 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் ஆகும்.அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 6,630 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.


அதேபோல அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களுக்கு 495 மருத்துவ இடங்களும் 125 பல் மருத்துவ இடங்களும் உள்ளன. இந்த இட ஒதுக்கீட்டில், 669 மதிப்பெண்களைப் பெற்று சென்னையைச் சேர்ந்த ரூபிகா முதலிடம் பெற்றுள்ளார்.