ஆன்லைன் மூலமாக மருத்துவ கலந்தாய்வு  நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளது என மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நீட் தேர்வு முடிவு கடந்த 7ம் தேதி வெளியான நிலையில், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப்பதிவு எப்போது தொடங்கும்? கலந்தாய்வு ஆன்லைனிலா? ஆப்லைனிலா? என்பது மாணவ-மாணவிகள், பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

 

இந்த நிலையில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏன்? என்பது குறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை, தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளின் மதிப்பெண் பட்டியலை இன்னும் எங்களுக்கு அனுப்பவில்லை. அவர்கள் அனுப்பியதும், விண்ணப்பப் பதிவு செய்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்' என்றனர். 

 

கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. அதாவது, சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடுகளுக்கு மட்டும் ஆப்லைனில் கலந்தாய்வு நடந்தது. அதேபோல்தான் இந்த ஆண்டும் கலந்தாய்வு நடைபெறுமா? அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் அனைத்து கலந்தாய்வும் ஆப்லைனில் நடத்தப்பட்டது போல திட்டமிடப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. 

 

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மிகவும் குறைந்த கால அளவே இருக்கிறது. அதனால் ஆப்லைனில் கலந்தாய்வு என்பது சாத்தியம் இல்லை. பெரும்பாலும் ஆன்லைனில்தான் கலந்தாய்வு நடக்கும். கடந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது போலவே, இந்த ஆண்டும் கலந்தாய்வும் நடக்க வாய்ப்பு அதிகம்' என்றனர். 

 

இந்த ஆண்டு கலந்தாய்வில், அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாகவும், மாணவர்களின் நலன் கருதியும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்ததும், சம்பந்தப்பட்ட மாணவர் அந்த இடத்துக்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவிடம் செலுத்திவிட வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாணவர், சேர்க்கை கடிதத்தை மட்டும் கொண்டு சென்றால் போதும், கல்விக்கான கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்துவிடும். 

 

மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த டாக்டர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றதாகவும், இடமாறுதல் பெற்றவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் அந்தந்த பணியிடங்களில் சேர்ந்துவிட்டதாகவும், அவர்களின் முழு விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு தெரிவித்தார்.