சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து, வரும் ஜனவரி 6-ம் தேதிக்குள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், தவறினால் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அடுத்தகட்டப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Continues below advertisement

இது தொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் விடுத்துள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் கொடுத்த வாக்குறுதி

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் பணி நிரந்தரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த காலங்களில் பலமுறை தெரிவித்து வந்தார். ஆனால், அந்த வாக்குறுதிகள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

Continues below advertisement

இந்நிலையில், கடந்த 22-12-2025 அன்று தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, வரும் ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஒரு நற்செய்தியை அறிவிப்பார் என்று அமைச்சர் மீண்டும் ஒரு நம்பிக்கையை அளித்துள்ளார். அமைச்சரின் இந்த வார்த்தைகளை நம்பி 12 ஆயிரம் ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர்.

15 ஆண்டு கால அவல நிலை

கடந்த 15 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் எங்களுக்கு, அரசு ஊழியர்களுக்குரிய எந்த அடிப்படை சலுகைகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக:

* ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் போனஸ் கிடையாது.

* அவசரத் தேவைகளுக்கான பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுவதில்லை.

 * மிக முக்கியமாக, கோடை விடுமுறை காலமான மே மாதத்திற்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.

 * வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் மருத்துவ காப்பீடு போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் எட்டாக்கனியாகவே உள்ளன.

* பணிக்காலத்தில் ஆசிரியர் யாராவது மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய குடும்ப நல நிதி கூட வழங்கப்படுவதில்லை.

வெறும் 12,500 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில், விலைவாசி உயர்வு மிகுந்த இன்றைய காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து 12,000 குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன.

தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதி எண் 181-ன் படி, "பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்று உறுதி அளித்தது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்களின் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் முடிய உள்ள நிலையிலும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

எங்களின் கோரிக்கையும் போராட்ட முடிவும்

தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதிய முறையை முழுமையாகக் கைவிட்டு, காலமுறை ஊதியம் (Regular Pay Scale) வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மட்டுமே எங்களின் பணி பாதுகாப்பும், வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும்.

வருகிற ஜனவரி 6-ம் தேதிக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தால் அதனை நாங்கள் மனதார வரவேற்போம். ஒருவேளை இந்த முறையும் காலதாமதம் செய்யப்பட்டாலோ அல்லது எங்களை ஏமாற்றும் வகையில் அறிவிப்பு இருந்தாலோ, தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை ஒன்றிணைத்து அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். என அந்த அறிக்கையில் சி.செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.