மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவ, மாணவிகள் www.skilltraining.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செம்பனார்கோவில் அரசு ஐ.டி.ஐ-யில் சேர்க்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் அசல் சான்றிதழ்கள் மற்றும் விவரங்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
* 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான அசல் கல்விச் சான்றிதழ் * சாதிச் சான்றிதழ் (Community Certificate) * மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate - TC) * அடையாள அட்டை (ஆதார் அட்டை) * தற்போதைய புகைப்படங்கள் (Passport size photos) * செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி (Email ID) மற்றும் கைப்பேசி எண்
வயது வரம்பு மற்றும் கட்டண விவரங்கள்
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு எவ்வித உச்ச வயது வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு (Debit Card), கிரெடிட் கார்டு (Credit Card), நெட் பேங்கிங் (Net Banking) அல்லது ஜி-பே (G-Pay) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகள் மூலமாக எளிதாகச் செலுத்தலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் வரும் 31.07.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக அரசின் அள்ளிக்கொடுக்கும் சலுகைகள்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி காலத்தின் போது, அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் கல்விக்கும் உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு விலையில்லாப் பொருட்களையும், நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி தகுதியுள்ள பயிற்சியாளர்களுக்குப் பின்வரும் சலுகைகள் கிடைக்கும்.
1. மாதாந்திர கல்வி உதவித்தொகை: பிரதி மாதம் ரூ. 750/- கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். 2. விலையில்லாப் பொருட்கள்: விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள் (Drawing Instruments). 3. காலணி மற்றும் மிதிவண்டி: விலையில்லா காலணி (1 ஜோடி) மற்றும் விலையில்லா மிதிவண்டி. 4. சிறப்புத் திட்ட நிதியுதவி: தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களான 'தமிழ்ப்புதல்வன்' மற்றும் 'புதுமைப்பெண்' திட்டங்களின் கீழ் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ. 1,000/- உயர்கல்வி உறுதித்தொகை வழங்கப்படும். 5. போக்குவரத்து வசதி: பயிற்சிக் காலத்தின் போது தங்கு தடையின்றி வந்து செல்ல கட்டணமில்லா அரசு பேருந்து பயண அட்டை (Bus Pass) வழங்கப்படும்.
தனியார் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் சலுகை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டின் (Government Quota) கீழ் சேர்க்கை பெற்றுப் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிக் கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு உறுதி மற்றும் தொடர்பு எண்கள்
தொழிற்பயிற்சி நிலையங்களில் வெற்றிகரமாகப் படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்களில் ஓராண்டு காலத்திற்கு உதவித்தொகையுடன் கூடிய ஒப்பந்த அடிப்படையிலான தொழிற்பழகுநர் பயிற்சி (Apprenticeship) பெற்றுத்தரப்படும். மேலும், வளாக நேர்காணல்கள் (Campus Interviews) மூலம் தகுதியான நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறியவும், சேர்க்கை தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும் 9677484954, 9442215972 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது செம்பனார்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரடியாக அணுகி விவரங்களைப் பெற்று, ஐ.டி.ஐ படிப்புகளில் சேர்ந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் விடுத்துள்ள அழைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
