மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 56ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். விழாவில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கலந்துகொள்வார் என்று அழைப்பிதழில் கூறப்பட்டிருந்த நிலையில் விழாவில் அவர் பங்கேற்கவில்லை.  


அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், உயர் கல்வித்துறையின் அமைச்சராக இருந்த பொன்முடி மாற்றப்பட்டு கோ.வி. செழியன் நியமிக்கப்பட்டார். அவர், உயர் கல்வித்துறை சார்ந்த விவகாரங்கள் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று கூறி இருந்தார்.


பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த அமைச்சர் கோவி. செழியன்


எனினும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று (அக்.21) நடைபெற்றது. இதில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 6,940 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் பங்கேற்பார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் பங்கேற்கவில்லை.


அதேபோல மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் கோவி. செழியன் கலந்துகொள்ளவில்லை.


இதுகுறித்து அமைச்சர் செழியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் அவமதித்ததால், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை'' என்று தெரிவித்தார்.


நடந்தது என்ன?


இதற்கிடையே தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் தலைமையில் இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது திராவிட நல் திருநாடு வரி விடுபட்டிருந்தது. இதுதொடர்பான பிரச்சினையில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.