PPC 2023: மாணவர்களைச் சந்திக்கும் பிரதமர் மோடி; 'பரிக்‌ஷா பே சார்ச்சா'-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இன்று (டிசம்பர் 30) கடைசி நாள் ஆகும்.

Continues below advertisement

பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரை ஆண்டுதோறும் பிரதமர் மோடி சந்திக்கிறார். பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இன்று (டிசம்பர் 30) கடைசி நாள் ஆகும்.

Continues below advertisement

பரிக்‌ஷா பே சார்ச்சா:

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 6-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். 

நேரடியாக நடைபெற்ற பரிக்‌ஷா பே சார்ச்சா

முதன்முறையாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியான “பரிக்‌ஷா பே சார்ச்சா 1.0”, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் உள்ள டால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களுடனான “பரிக்‌ஷா பே சார்ச்சா 2.0” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் அதே மைதானத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது.


மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற “பரிக்‌ஷா பே சார்ச்சா 2020” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் டால்கடோரா மைதானத்தில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது.

இந்த சூழலில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற “பரிக்‌ஷா பே சார்ச்சா 2021” நிகழ்ச்சியில் உலகெங்கும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.

மாணவர்களுடன் சந்திப்பு:

இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, ''பொதுத் தேர்வுகள் விரைவில் வர உள்ளன. அதனால், பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியும் விரைவில் நடைபெற உள்ளது. நம்முடைய ஆற்றல் மிகுந்த இளைஞர்களுடன் கலந்துபேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். அவர்களின் சவால்கள், லட்சியங்களைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பரிக்‌ஷா பே சார்ச்சா 2023 நிகழ்ச்சி தொடர்பான சுவாரசியமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு தேர்வு எழுதும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நம் மாணவர்களுக்கு, அழுத்தம் இல்லாத தேர்வுச் சூழலை உருவாக்க, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

முன்பதிவுக்கு இன்றே கடைசி

பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சிக்கான முன்பதிவு இன்றுடன் (டிசம்பர் 30ஆம் தேதி) முடிவடைகிறது. இதையடுத்து, விரைவில் நிகழ்ச்சித் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. 2023ஆம் ஆண்டுக்கான பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி மார்ச் கடைசி வாரத்திலோ ஏப்ரல் முதல் வாரத்திலோ நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு:  mygov.in

Continues below advertisement
Sponsored Links by Taboola