பொதுத் தேர்வு இருப்பதால் ஜேஇஇ மெயின் தேர்வின் ஜனவரி மாத அமர்வை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பான ட்வீட்டுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.  


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.


இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.  


இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு குறித்த அறிவிப்பு டிசம்பர் 15ஆம் தேதி அன்று வெளியானது. இதற்கான விண்ணப்பப் பதிவு, டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கியது. இதற்கு மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.






இந்தத் தேர்வானது, ஜனவரி 24, 25, 27, 28, 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 2ஆவது அமர்வு ஏப்ரல் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 


இரண்டு அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள்  தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன. 


ஜனவரி மாத அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்ட நிலையில் இதற்கு மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக JEEAfterBoards என்பன உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. 


 






மாணவர்களின் குரலுக்கு,  தேசியத் தேர்வுகள் முகமை செவிசாய்க்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.