தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் இன்று தொடங்கி, நடைபெற்றன. தேர்வுகள் பெரும்பாலும் எளிதாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.


மொத்தம் 5,529 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கு, மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதற்காகத் தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பித்தனர். இதில் இருந்து 5,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுக்கு அனுப்பப்படுவர்.


குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்துத் தேர்வர்கள் சிலரிடம் பேசினோம்.


லிபிரியா


''பொதுத் தமிழ் பகுதி மிகவும் எளிமையாக இருந்தது. இதில் பெரும்பாலும் பழைய கேள்வித் தாள்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.  பள்ளி மாணவர்களாலும் எழுத முடியும் வகையில் பொதுத்தமிழ் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பொது அறிவு பகுதியில் இருந்து கேள்விகள் எளிதாக இருந்தன.


செல்வ ராம ரத்தினம் 


குரூப் 2 தேர்வு வினாத்தாள் மூலம் டிஎன்பிஎஸ்சி தரமான கேள்வி கேட்கும் சூழலை நோக்கி நகர்வதாகவே பார்க்கிறேன். வரலாறு பகுதியில், ’இடைக்கால இந்தியா’ பிரிவில் ஊகிக்க முடியாத வகையில் கேள்விகள் இருந்தன. பொருளாதாரப் பிரிவில் நடப்பு நிகழ்வுகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. இதில், யுபிஎஸ்சி தரத்தில் கேள்விகள் இருந்தன.


புவியியல் பகுதியில் குறைவாகவே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. எப்போதும்போல அல்லாமல், யோசித்து விடை அளிக்கும் வகையில் கேள்விகள் இருந்தன. கணிதப் பகுதி மிகவும் எளிமையாக இருந்தது. பொது அறிவு பகுதியிலும் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் பாடங்கள் கேட்கப்பட்டிருந்தன. 


அசோக்


பொது அறிவு பகுதி எளிமையாக இருந்தது. பொது ஆங்கிலம் பகுதியில் இலக்கணம் எளிமையாக இருந்தது. கவிதை, உரைநடை பகுதிகள் நேரடியாகவே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வரலாறு, அரசியலமைப்புப் பகுதிகள் எளிமையாக இருந்தன. அறிவியல் பகுதியில் கேள்விகள் மிகவும் குறைவாகவே கேட்கப்பட்டிருந்தாலும், எளிதாகத்தான் இருந்தது. பொருளாதாரப் பகுதியில் தமிழ்நாடு பட்ஜெட்டில் இருந்து 2 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 


சந்தியா


குரூப் 2 பொதுத்தமிழ் மிகவும் எளிதாக இருந்தது. இதனால், குரூப் 4 பொதுத்தமிழ் கொஞ்சம் கடினமாகக் கேட்கப்படலாம் என்று நினைக்கிறேன். தேர்வுக்குத் தயார் ஆகாதவர்கள்கூட எளிதாக எழுதும் வகையில், கணக்குப் பகுதி இருந்தது. பொது அறிவு பகுதியில் கேள்விகள் கணிக்க முடியாத வகையில் இருந்தன''. 


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண