சியூஎட் (CUET) எனப்படும் கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கானபொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அண்மையில் யுஜிசி சார்பில் வெளியானது.  ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. 


3 பிரிவுகளாகக் கேள்விகள்


பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும். 


இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம். 


2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.


3ஆவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகள் இந்தப் பிரிவில் கேட்கப்படும். 


பல்கலைக்கழங்களின் தேவைக்கேற்பத் தேர்வுகள் 


இதில் 2ஆவது மற்றும் 3ஆவது பிரிவான துறை சார் அறிவுக்கான தேர்வும் பொது அறிவுத் தேர்வும் கட்டாயமில்லை. பல்கலைக்கழகங்களின் தேவைக்கு ஏற்ப, இந்தப் பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். உதாரணத்துக்கு, கட்டாய மொழித் தேர்வுடன் ஒரு மாணவர் பொது அறிவுக்கான தேர்வை எழுதலாம். அல்லது கட்டாய மொழித் தேர்வுடன் துறை சார் தேர்வை மட்டும் எழுதலாம். 




இத்துடன் நிபுணத்துவம் தேவைப்படும் படிப்புகளான இசை, ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கலை படிப்புகளுக்கு, கல்லூரிகள் தனியாகத் தேர்வோ, நேர்காணலோ நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2 கட்டங்களாகத் தேர்வு


இரண்டு கட்டங்களாக இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தில், கட்டாய மொழிப் பாடமும் 2 துறை சார் தாள்களையும் எழுத வேண்டும். 


இந்த நிலையில், கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ளது. 


இதற்கு தேர்வர்கள் https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 


கூடுதல் விவரங்களுக்கு:  https://nta.ac.in/Download/Notice/Notice_20220327205829.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து படிக்கவும்.