அந்தமான் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தாழ்வு மண்டலத்திற்கு பிறகு 24 மணிநேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் சின்னமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4 ம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே தீவிர புயலாக கரையை கடக்கும்.
இதன் காரணமாக, டிசம்பர் 4 ம்(இன்று) தேதி முதல் தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும், இந்த புயலானது கரையை கடந்த பின்னர், தமிழ்நாட்டில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கனமழை காரணமாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவாகி வருகின்றது. இதன் காரணமாக சூறாவளி வீச இருக்கும் பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், தென் தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்