புதுச்சேரி : புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள CBSC பாடத்திட்டப் பள்ளிகளில், வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் இந்தி மொழியை இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2026-2027ஆம் கல்வியாண்டு முதல் இந்தி மொழி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டப் பள்ளிகளில், வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் இந்தி மொழியை இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ கல்விப் பிரிவு இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை, மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி இயக்குநரின் அதிரடிச் சுற்றறிக்கை
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கல்வித் துறையில் இந்த முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கல்விப் பிரிவு இயக்குநர், அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "புதிய கல்வி கொள்கையின் வழிகாட்டுதலின்படி, 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி மொழி இரண்டாம் மொழியாகக் கட்டாயம் பயிற்றுவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கையும் மும்மொழிக் கொள்கையும்
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை (NEP) அமல்படுத்துவதில் புதுச்சேரி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2024ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி அரசுப் பள்ளிகள் படிப்படியாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன.
புதிய கல்வி கொள்கையின் விதிகளின்படி:
மாணவர்கள் மொத்தம் மூன்று மொழிகளைப் பயில வேண்டும். அதில் ஒன்று வெளிநாட்டு மொழியாக இருக்கலாம், ஆனால் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக இருக்க வேண்டும். புதுச்சேரியைப் பொறுத்தவரை, முதல் மொழியாகத் தமிழ் உள்ள நிலையில், இரண்டாவது இந்திய மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.
பிரஞ்சு மொழிக்கு நேருமா பின்னடைவு?
புதுச்சேரியின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக பிரஞ்சு மொழி திகழ்கிறது. இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் பிரஞ்சு மொழியை ஆர்வத்துடன் இரண்டாம் மொழியாகத் தேர்வு செய்து பயின்று வருகின்றனர். தற்போதைய புதிய உத்தரவின்படி, இரண்டு இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வருவதால், மாணவர்கள் பிரஞ்சு மொழிக்கு பதிலாக இந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது புதுச்சேரியின் பாரம்பரிய கல்வி முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கவலை
இந்தத் திடீர் அறிவிப்பு குறித்துப் பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், "ஏற்கனவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாணவர்கள் மாறி வரும் நிலையில், தற்போது இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது அவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் செயல். பிரஞ்சு மொழியைத் தேர்வு செய்யும் உரிமையை இது பறிப்பதாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் அரசியல் கட்சிகள் மத்தியிலும், இந்த இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் விவகாரம் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு வித்திட்டுள்ளது. 2026-ல் அமலுக்கு வரவுள்ள இந்தத் திட்டம், புதுச்சேரி கல்விச் சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
