பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய  கல்வி உதவித் தொகை இன்னும் வழங்கப்படாததால் அவர்கள்  கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல்  அவதிப்பட்டு வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் தேவையற்ற தாமதம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை (Post Matric Scholarship Scheme) வழங்கப்பட்டு வருகிறது. உயர் கல்வி பயிலும் ஏழைக்குடும்ப மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக இந்த உதவித் தொகையைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

Continues below advertisement

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதலாம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையாக தலா ரூ. 52,980 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

கல்வி பாதிக்கப்படும் ஆபத்து முதலாம் ஆண்டின் இறுதியில் இந்த உதவித் தொகை முழுமையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.52,980 வழங்குவதற்கு பதிலாக இதுவரை மொத்தம் ரூ.3025 மட்டும்தான் வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள ரூ.49,955 இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், அந்த மாணவர்களால் இரண்டாம் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை. உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்தும்படி பல்கலைக்கழகம் கெடுபிடி காட்டி வரும் நிலையில், உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்கப்படாவிட்டால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் இன்னும் கல்வி உதவித் தொகை வழங்கப்படாததற்கு , இதற்கு பொறுப்பான பல்கலைக்கழக அதிகாரிகளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை அதிகாரிகளும்தான் காரணம் ஆவர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாணவர்கள் சந்தித்து முறையிடும் போதெல்லா அவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்களே தவிர, எவரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே ஆதாரம் இத்தகைய கல்வி உதவித் தொகைகள்தான். அவை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும். இதை உணர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் உள்பட இதுவரை கல்வி உதவித் தொகை வழங்கப்படாத அனைத்து மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.