ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டுமென உத்தரவிடக் கோரி  சக்திவேல் என்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வித்துறையில்  பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பைப் பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான பட்டியலைத் தயாரிக்கும்படியும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.


2022 ஜூலை 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு முன், தலைமை ஆசிரியர்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பதவி உயர்விற்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.


இதை எதிர்த்து வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டுமென உத்தரவிடக் கோரி சக்திவேல் என்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்குகளை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் விசாரித்தார். இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணகுமார், ’’ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும்’’ என்று தெரிவித்தார். 


மேலும் பேசிய அவர், ’’கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. இதில் இருந்து, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பது தெளிவாகிறது. எனவே தமிழக பள்ளிக் கல்வித் துறையில்  பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை  பள்ளிக் கல்வி ஆணையர் புதிதாக வெளியிட வேண்டும்’’ என்று நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.


ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியர்களின் தகுதியே காரணம். சிறந்த கல்வித் தகுதியைப் பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும்  சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.