தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்களை இனியும் ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க.  தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

Continues below advertisement

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியான ஜாக்டோ - ஜியோ இன்று சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தி வருகிறது. 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் சபிக்கப்பட்ட சமூகம் என்றால் அது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்தான் என்று கூறும் அளவுக்கு அவர்களுக்கு எதிராக அடுக்கடுக்கான துரோகங்களை திமுக அரசு செய்து வருகிறது. அரசு ஊழியர்கள் சார்பில் முன்வைக்கப்படும் அனைத்துக் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை ஆகும். இந்தக் கோரிக்கைகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருபவைதான். இன்னும் கேட்டால் எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தக் கோரிக்கைகளை திமுகவே வலியுறுத்தியது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற திமுக அரசு மறுத்து வருகிறது.

ஒற்றை வாக்குறுதியை மட்டுமே நிறைவேற்றிய அரசு

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்  தொடர்பாக 10 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றிய திமுக அரசு, மீதமுள்ள 9 வாக்குறுதிகளையும் இன்னும் நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த திமுக, அதற்காக குழு ஒன்றை அமைத்து அதன் இறுதி அறிக்கையைக் கூட இன்னும் பெறாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது.

முனிவர் - விஷப்பாம்பு கதை ஒன்று சொல்லப்படுவதுண்டு. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  நச்சுப்பாம்பை  பார்த்த முனிவர் அந்த பாம்புக்கு மருத்துவம் அளித்து காப்பாற்றினாராம். ஆனால், அந்த பாம்போ, கொஞ்சமும் நன்றி இல்லாமல் அந்த முனிவரையே கொத்தியதாம். அதேபோல்தான் பத்தாண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த  திமுகவை அரசு ஊழியர்கள்தான் ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்தினார்கள்.  ஆனால், அந்த நன்றி கொஞ்சமும் இல்லாமல்  அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது.

இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட அதிகமாக தமிழ்நாடு 16% பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டதாக ஒருபுறம் மார்தட்டிக் கொள்ளும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னொருபுறம்  நிதி நெருக்கடி என்ற பழைய பல்லவியை மீண்டும், மீண்டும் பாடி  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது ஏன்? இதற்கு பெயர்தானே இரட்டை வேடம்?

அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு

அரசு ஊழியர்கள்தான் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு ஆவர்.  அரசின் நிர்வாக சுமைகளை சுமக்கும் அவர்களின் கோரிக்கைகளை  தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் திமுகவை  வீட்டுக்கும் அனுப்பும் மக்கள் படையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முன் நின்று வழி நடத்துவார்கள். திமுக அரசு அகற்றப்படுவதை உறுதி செய்வார்கள்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.