திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளரும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தலைவரும் தெரிவித்து உள்ளதாவது:
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் கீழ் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிப்பட்டி கிராமம், கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் 200 ஆர்வலர்களுக்கு வழங்கப்படுகிறது.
6 மாதம் முழுநேரப் பயிற்சி
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் ஆறு மாதம் முழுநேரப் பயிற்சியாக நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.
அக்.27 வரை விண்ணப்பிக்கலாம்
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு, 13.10.2025 முதல் 27.10.2025 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 04553- 291269 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு முறை எப்படி?
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆர்வலர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.
நவம்பர் 2025 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: www.cecc.in