சென்னை அரும்பாக்கம் டிஜி வைஸ்ணவா கல்லூரியில் ஓய்வு பெற்ற மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கி கவுரவித்தது.சிறந்த மேலாண்மைக்கான அப்துல்கலாம் ஆசிரியர் விருதை தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கி, Europe Study Center அமைப்பு வழங்கி பாராட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் ஷேக் சலீம் பங்கேற்று ஆசிரியர்களை கவுரவித்தார்.



இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய ஒருங்கிணைப்பாளர் RBU ஷ்யாம்குமார், விருது பெறுவோருக்கு என்னுடைய வாழ்த்துகள். என்னுடைய வாழக்கை பயணத்திலே, ஒரு ஆசிரியருக்கு மகனாக ஒரு ஆசிரியையை மணந்தவனாக, ஒரு ஆசிரியை மாமியாராக ஒரு ஆசிரியையை தங்கையாக பெற்றவன் நான். எங்கள் குடும்பமே ஒரு ஆசிரியர் குடும்பம். ஆகவே, எங்கு சென்றாலும் ஆசிரியர்களை கவுரவிக்கும் அழைப்பு வந்தால் அதனை நான் தவறவிடுவதே இல்லை. ஏனென்றால், உங்கள் கஷ்டம், சிரமம் அத்தனையும் உணர்ந்தவன் நான் என்று பேசினார்.


மேலும், ஆசிரியர்களின் உழைப்பை பார்த்து வளர்ந்தவன். இப்போதும் பார்த்து வாழ்ந்துக்கொண்டு இருப்பவன் நான். புதிய தலைமுறை டிவி சேனலில் நான் சி.இ.ஓவாக இருந்தேன். 5 ரூபாய்க்கு வார இதழ் தொடங்கி, அதை பிரம்மாண்டமான தொலைக்காட்சியாக மாற்றும்போதுதான் இங்கிருக்கும் சலீமின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அதே நேரத்தில் சவால்கள் நிறைந்த ஒரு பொறுப்பு என்பது ஆசிரியரினுடையது.


முதலில் என் பிள்ளையை அடிச்சுக் கூட படிக்க வைய்ங்க, அவன் நல்ல ஒழுக்கமானவனாக வளர்ந்தால் போதும் என்று பெற்றோர்கள் சொல்ல காலம் போய், இப்போது என் பிள்ளையை அடித்துவிட்டீர்களா என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. இதுவும் ஆசிரியர்களுக்கான ஒரு சவால்தான் என்றும் பேசினார். இப்படி பல சவால்களையே தங்களது பணியாக கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துகள் என்று கூறி, விருதுகளை வழங்கினார். விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கியும் பாராட்டப்பட்டது.


இந்த விழாவில், விநாயக மிஷன் பல்கலைக்கழக வேந்தர் அனுராதா கணேஷன், அப்துல்கலாமின் பேரன் ஷேக் சலீம், Europe Study Center மேலாண் இயக்குநர் சிவராமன் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.